``என் பணியின் மீதும் ஆர்வம் காட்டிய அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி..'' - சுபான்ஷு சுக்லா
அமெரிக்காவின், 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கானப் பயண திட்டத்தில் ஈடுபட்டது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இணைந்து, இப்பணியை செய்தன.
இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ம் தேதி, 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின், 'பால்கன் 9' ராக்கெட் வாயிலாக பூமியில் இருந்து புறப்பட்டனர்.

அவர்களை சுமந்து சென்ற, 'டிராகன்' விண்கலம், 28 மணி நேர பயணத்திற்குபின் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
இதன் வாயிலாக, ராகேஷ் சர்மாவுக்கு அடுத்தபடியாக விண்வெளி பயணம் மேற்கொண்ட இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு பெற்றார். இதைத்தொடர்ந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் குழுவினர் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
திட்டமிட்டப்படி சர்வதேச விண்வெளி நிலையத்தில், 18 நாள்கள் தங்கியிருந்த அக்குழு, மொத்தம் 433 மணி நேரத்தை செலவிட்ட நிலையில், தங்கள் பயணத்தை நிறைவுசெய்து பூமியை நோக்கி, டிராகன் விண்கலம் வாயிலாக நேற்று முன்தினம் புறப்பட்டது.
சுபான்ஷு சுக்லா உள்பட நான்கு பேர் அடங்கிய குழுவினர், வெற்றிகரமாக நேற்று (ஜூலை 15) பூமிக்கு திரும்பினர்.

இதன் வாயிலாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்த சுபான்ஷு சுக்லா தனது பேட்டியில், "விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்தது. என் மீதும், என் பணியின் மீதும் ஆர்வம் காட்டிய அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.