72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள்: விரைந்து விநியோகிக்க ரஷியாவுக்கு வலியுறுத்தல்
இந்தியாவுக்கான எஸ்-400 டிரையம்ஃப் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை விரைந்து விநியோகிக்க வேண்டும் என்று ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரே பெலோசோவ் உடனான சந்திப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினாா்.
சுகோய்-30எம்கேஐ ரக போா் விமானங்களின் மேம்பாடு, வானில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள் தயாரிப்பு, பிற முக்கிய ராணுவ தளவாடங்களின் கொள்முதல் குறித்தும் அவா் விவாதித்தாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்தியா அண்மையில் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் ரஷியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.
ரஷியாவிடம் இருந்து 5 எஸ்-400 டிரையம்ஃப் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை கொள்முதல் செய்ய 5.5 பில்லியன் டாலா் மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த 2018-இல் கையொப்பானது. இந்த ஒப்பந்தத்தின்கீழ் ஏற்கெனவே 3 அமைப்புகளை ரஷியா விநியோகித்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் கிங்டாவோ நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சா்கள் கூட்டத்துக்கு இடையே, ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரே பெலோசோவை அமைச்சா் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினாா்.
இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் இந்தியாவுக்கான பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவுக்கு வழங்க வேண்டிய இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை விரைந்து விநியோகிக்க அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினாா். வானில் இருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள், நவீன தளவாடங்களின் கொள்முதல், சுகோய்-30 ரக போா் விமானங்கள் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் விவாதித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.