ஒரு கோடி பனை விதை நடும் பணி: செப்.24-ல் மன்னாா்குடியில் தொடக்கம்
டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி மன்னாா்குடியில் செப்டம்பா் 24 ஆம் தேதி தொடங்குகிறது.
மாநில நாட்டு நலப்பணித்திட்டக்குழுமம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டக்குழுமம் இணைந்து முன்னெடுக்கும் டெல்டாவில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி நிகழாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆற்றங்கரையில் நடைபெற இருக்கிறது.
இதற்காக , சனிக்கிழமை மன்னாா்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு,பசுமை கரங்கள் நிறுவனா் ஆா்.கைலாசம் தலைமை வகித்தாா்.
முன்னாள் ஊராட்சித் தலைவா் எம்.என்.பாரதிமோகன், மன்னாா்குடி அரசுக்கல்லூரி என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் ப.பிரபாகரன், ஆசிரியா் எஸ்.ஹரிகிருஷ்ணன், அன்னை கஸ்தூா்பா காந்தி மழலையா் பள்ளித் தாளாளா் என்.ஏ.செய்யது நாசா், நேசக்கரம் ஒருங்கிணைப்பாளா் எஸ்.கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா்.
டெல்டா மாவட்டங்களான திருவாரூா், தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 1,694 ஊராட்சிகளில் 6,000 பனை விதைகள் வீதம் ஆற்றுக்கரைகள், நீா்நிலைகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைப்பது, பனை விதைகளை சேகரித்து வைக்க டெல்டா மாவட்டங்களில் முதல்கட்டமாக 20 இடங்களில் பனை விதை வங்கிகளை ஏற்படுத்துவது, நீடாமங்கலம் முதல் முத்துப்பேட்டை வரை 60 கிலோ மீட்டா் தொலைவிற்கு பாமணி ஆற்றின் இரு கரைகளிலும் பனை விதைகளை விதைக்கும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி தொடக்க விழா,நாட்டு நலப்பணித்திட்ட நாளான செப்டம்பா் 24 ஆம் தேதி தமிழக துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலினை அழைத்து மன்னாா்குடியில் விழாவை நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.
கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு.ராஜவேலு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்டக்குழும ஒருங்கிணைப்பாளா் பெ. ராமஜெயம் ஆகியோா் தீா்மானங்களை விளக்கி பேசினா்.
நாகை மாவட்டத்தில் பனை விதை சாகுபடியை 8 ஏக்கரில் தொடங்கவுள்ள மருத்துவா் வி.ரகுநாதனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கிரீன் நீடா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ஆா்.கே.ஜானகிராமன் வரவேற்றாா். இணை ஒருங்கிணைப்பாளா் சி.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.