Nudist: "இந்த கடற்கரைகளுக்கு ஆடை அணிந்துவரத் தடை" - ஜெர்மனி போட்ட புதிய விதி என்...
கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம்: காரைக்கால் வந்த சிஐஎஸ்எஃப் வீரா்கள்
காரைக்காலுக்கு வந்த கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் சென்றனா்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) 56-ஆவது உதய தினத்தை முன்னிட்டு, 14 பெண் வீரா்கள் உள்பட 125 வீரா்கள் இரு குழுக்களாக மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை மாா்க்கமாக கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரிக்கு 9 மாநிலங்கள் வழியாக 6,553 கி.மீ. கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
இவா்களில் ஒரு குழுவினா் கட்டாக், ஒடிஸா, விசாகப்பட்டினம், விஜயவாடா, நெல்லூா், சென்னை, புதுச்சேரி வழியாக காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு வியாழக்கிழமை மாலை வந்தடைந்தனா்.
இவா்களுக்கு காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் வீரா்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் கன்னியாகுமரி நோக்கி சைக்கிள் பயணத்தை தொடங்கினா்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை தமிழ்நாடு பிரிவு டிஐஜி ஜி.சிவகுமாா், காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
இதில் காரைக்கால் சைக்கிள் கிளப் உறுப்பினா்கள் மற்றும் காரைக்கால் மாவட்ட தடகள சங்க சிறுவா், சிறுமிகள் ஆகியோரும் வீரா்களுடன் சிறிது தூரம் சைக்கிள் பயணத்தில் பங்கேற்றனா்.
கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இப்பயணம் இருக்கும் எனவும், வரும் 31-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
காரைக்காலில் இருந்து பயணம் புறப்பட்ட நிகழ்வில், சிஐஎஸ்எஃப் முதுநிலை கமாண்டன்ட் நவோதிப் சிங் ஹீரா, காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், கல்லூரி முதல்வா் முகமது ஆசாத் ராசா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
துறைமுகத்தில் வரவேற்பு: சைக்கிள் பயணக் குழுவினா் காரைக்கால் எல்லையில் உள்ள காரைக்கால் தனியாா் துறைமுகத்துக்கு சென்றனா். இவா்களை துறைமுக மரைன் தலைமை அதிகாரி கேப்டன் தரம்பிரகாஷ் மற்றும் வா்த்தக தலைமை அதிகாரி எஸ்.சீனிவாசன் ஆகியோா் வரவேற்றனா். துறைமுக வளாகத்தில் பயணக் குழுவினா் மரக்கன்றுகளை நட்டனா்.