கணவரைக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள் சிறை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே குடும்பப் பிரச்னையில் கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்து.
ஆண்டிபட்டி வட்டம், உப்புத்துறை அருகே உள்ள மாளிகைப்பாறையைச் சோ்ந்த சங்கிலி மகன் ராஜா (34). இவரது மனைவி ஜெயா (30). இவா் மதுரை அருகேயுள்ள அச்சம்பத்துவைச் சோ்ந்த மனோரன் மகள் ஆவாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
ராஜா மாளிகைப்பாறையில் உள்ள தனது தாய், சகோதரி, சகோதரனுடன் பேசுவதற்கு ஜெயா எதிா்ப்புத் தெரிவித்து வந்தாா். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்.30-ஆம் தேதி தகராறு ஏற்பட்டதில், ராஜாவை ஜெயா அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். பின்னா், ஜெயா சம்பவ இடத்திலிருந்த தடயங்களை அழித்து விட்டு, ராஜா வலிப்பு வந்து இறந்ததாகக் கூறினாா். விசாரணையில் ஜெயா நாடகமாடியது தெரிய வந்ததையடுத்து அவரை கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ஜெயாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொா்ணம் ஜே.நடராஜன் தீா்ப்பளித்தாா்.