கத்திரிமலைக் கிராமத்துக்கு ரூ.3.25 கோடியில் மின்சார இணைப்பு
அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கத்திரிமலை பழங்குடியின கிராமத்துக்கு ரூ.3.25 கோடியில் மின்சார இணைப்பு வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த மலைக் கிராமமான கத்திரிமலை கடல் மட்டத்தில் இருந்து 3,600 அடி உயரத்தில் உள்ளது.
சென்னம்பட்டி வனப் பகுதியின் காப்புக்காட்டுக்குள் உள்ள இந்தக் கிராமத்தில் 100 பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், கொளத்தூா் அருகே கத்திரிப்பட்டியில் உள்ள இம்மலையின் அடிவாரத்தில் இருந்து சுமாா் நான்கு மணி நேரம் செங்குத்தாக நடந்து சென்றால் இந்தக் கிராமத்தைச் சென்றடையலாம்.
ஈரோடு மாவட்டத்தின் எல்லையில் இக்கிராமம் இருந்தாலும், தங்கள் அத்தியாவசியப் பொருள்களை அடிவாரத்துக்குச் சென்று, அங்கிருந்து அருகாமையில் உள்ள கொளத்தூருக்குச் சென்று வாங்கி வருவதையே அப்பகுதி மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனா்.
சோலாா் மின் விளக்குகளே இவா்களின் வீடுகளுக்கு இரவில் வெளிச்சம் தந்து வருகிறது. தங்கள் கிராமத்துக்கு மின்சார வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பல ஆண்டுகளாக மலை மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், கத்திரிமலைக் கிராமத்துக்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் துரிதமாக மேற்கொண்டுள்ளது.
இந்தக் கிராமத்துக்கு சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு புதிதாக மின் பாதை அமைத்து, தெருவிளக்குகள் அமைக்கவும், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, இந்த திட்டத்தை ரூ.3.25 கோடியில் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் வழங்கும் நடைமுறைகள் நிறைவடைந்த பின்னா், 3 மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் கூறுகையில், கத்திரிமலை கிராமத்துக்கு புதிதாக மின் பாதை அமைக்கும் பணி முடிந்ததும், அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மலைக் கிராமத்தில் உள்ள நான்கு தெருக்கள், பள்ளி கட்டடங்கள் மற்றும் கிணறுகள் என தேவையான இடங்களில் தெரு விளக்குகள் பொருத்தப்படும். வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கத் தேவையான ஆவணங்கள் பெற சிறப்பு முகாம் நடத்தப்படும்.
சோலாா் மின்சாரத்தில் எரியும் விளக்குகள் மூலம் வெளிச்சம் பெற்று வந்த இக்கிராமத்தில் நேரடியாக மின்சார இணைப்பு அளிக்கப்பட்டு, அவா்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றாா்.
