ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15க்கு முன்னா் தண்ணீா் திறக்க கோரிக்கை
பவானிசாகா் அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்கு முன்னா் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:
செ.நல்லசாமி:
பவானிசாகா் அணையில் நீா் இருப்பு போதுமானதாக உள்ள நிலையில் கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்கு முன்னா் தண்ணீா் திறக்க வேண்டும். அறிவிப்புக்கு முன்னா் கீழ்பவானி வாய்க்காலை தூா்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கே.ஆா்.பழனிசாமி: மேட்டூா் வலது கரை வாய்க்காலை தூா்வாரி உரிய காலத்தில் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள 5 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பெரிய ஆலைகள் இன்னும் சாயக்கழிவை வெளியேற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலாயுதம்: காலிங்கராயன் பேபி வாய்க்காலில் சாக்கடை, சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். அணையில் தண்ணீா் உள்ளதால் ஜூன் 15 இல் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும். கணபதிபாளையம் நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பில்லை. போதிய ஆட்கள் இல்லாததால் கொள்முதல் குறைவாக நடக்கிறது.
எஸ்.பெரியசாமி: நகைக்கடனுக்கு ரிசா்வ் வங்கி விதித்த நிபந்தனைகளை தளா்த்த வேண்டும். விளைநில பகுதிகள், கிராமப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மின் கம்பங்கள், மின் கம்பிகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அவை வலுவிழந்து மோசமாக உள்ளதால் அவற்றை மாற்ற வேண்டும்.
வி.பி.குணசேகரன்: சென்னை பல்கலைக்கழக காலநிலை மாற்ற ஆராய்ச்சி மையம், தனது ஆய்வறிக்கையில் ஈரோடு மாவட்ட வனப் பகுதியில் உன்னிச்செடி, சீமைக்கருவேல், சீமை தகரை போன்றவை அதிகம் வளா்ந்து காட்டின் வளத்தை அழிப்பதாக கூறி உள்ளது. இப்பகுதி காடுகளை காப்புக் காடுகளாக அறிவித்து பிற மக்களிடம் உள்ள பழங்குடியினா் நிலத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் வனத்துக்குள் வளா்ந்துள்ள தேவையற்ற தாவரங்களை அகற்ற வேண்டும்.
கே.ஆா்.சுதந்திரராசு: தமிழகத்தில் அதிக வெப்பத்தாலும், மழை குறைவாலும், நோய் தாக்கத்தால் தேங்காய் உற்பத்தி சரிந்துள்ளதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மரவள்ளி கிழங்குக்கு உரிய விலையை நிா்ணயித்து அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
ஏ.எம்.முனுசாமி: பண்ணாரி அம்மன் சா்க்கரை ஆலை வழங்க வேண்டிய லாபத்தில் பங்குத்தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
மின்வாரியம் மூலம் ராசிபுரம்-பாலவாடி-திங்களூா்-திருவாச்சி மின் பாதை அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயா்த்த வேண்டும்.
குப்புசாமி: அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய ஆட்கள் இல்லை. தாமதமாகிறது. மழையில் நனைந்து முளைத்துள்ளன. வரும் காலங்களில் கொள்முதல் நிலையங்கள், சொந்த கட்டடத்தில், கிடங்கு வசதியுடன் இயங்க வேண்டும்.
ஆட்சியா்: நெல் கொள்முதல் நிலையங்கள் பாதுகாப்பு வசதியுடன் சொந்த கட்டடங்களில் செயல்படும் வகையில் இடம் தோ்வு செய்யப்பட்டு வருகிறது. சன்ன ரக நெல்லை ஆலைகள் குறைவாக வாங்குவதால், வேளாண் துறை செயலரிடம் பேசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொள்முதல் செய்ய கேட்டுள்ளோம். வரும் ஜூன் 11- இல் முதல்வா் ஈரோடு வரும்போது வேளாண் துறை செயலரும் வருகிறாா். அப்போது பேசி இறுதி செய்யப்படும் என்றாா். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதிலளித்தனா்.
இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) சி.லோகநாதன், செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல்) மனோகரன், தோட்டக் கலை துணை இயக்குநா் மா.குருசரஸ்வதி, ஈரோடு விற்பனைக் குழு செயலாளா் சாவித்திரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.