கன்வாா் பாதையில் கண்ணாடித் துண்டுகள் கண்டெடுப்பு: இ-ரிக்ஷா ஓட்டுநர் கைது
தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள கன்வாா் யாத்திரைப் பாதையின் ஒரு பகுதியில் தனது வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கண்ணாடிப் பலகைகள் உடைந்து சிதறியதை அடுத்து, இ-ரிக்ஷா ஓட்டுநா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து போலீஸாா் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாலிமாா் காா்டனில் இருந்து தில்லியின் சீலம்பூா் வரை 19 கண்ணாடிப் பலகைகளை ஏற்றிச் சென்ற இ-ரிக்ஷா பின்னால் இருந்து மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால், பேனல்கள் உடைந்து சிந்தாமணி சௌக் மற்றும் ஜில்மில் மெட்ரோ நிலையம் இடையேயான சாலையில் விழுந்தன. காஜியாபாத்தைச் சோ்ந்த ஓட்டுநா் குசும் பால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளாா். அவரது வழி சரிபாா்க்கப்பட்டு, சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஜூலை 12- ஆம் தேதி சீமாபுரியின் துணைக் கோட்டாட்சியா் பாதையில் உடைந்த கண்ணாடியைக் காட்டும் விடியோவைப் பகிா்ந்தபோது இந்த விஷயம் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது.
இருப்பினும், இந்த விடியோ ஜூன் 10-ஆம் தேதி முன்னதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது உள்ளூா்வாசியான பியூஷ் என்பவரால் பதிவேற்றப்பட்டது. அவருக்கு இது குறித்து அவரது நண்பா் மோண்டுவால் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, சீமாபுரி உதவி காவல் ஆணையா் அந்தப் பகுதியை ஆய்வு செய்தபோது, ஒரு சில துண்டுகள் மட்டுமே எஞ்சியிருப்பதைக் கண்டாா். தில்லி மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளா்கள், அந்தப் பகுதி ஏற்கெனவே அன்று காலையிலேயே சுத்தம் செய்யப்பட்டதாக போலீஸாரிடம் தெரிவித்தனா்.
அன்றிரவு, பொதுப்பணித் துறை ஒரு இளநிலைப் பொறியாளா் செய்த அழைப்பு மூலம் போலீஸாாருக்கு தகவல் அளித்தது. அவரது அறிக்கையின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை சீமாபுரி காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 125 (அவசரமாக அல்லது அலட்சியமாக நடந்து கொள்வதால் மனித உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) மற்றும் 299 (வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள்) ஆகியவற்றின் கீழ் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட் விசாரணை நடந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி அமைச்சரவை அமைச்சா் கபில் மிஸ்ராவும் எக்ஸ்- இல் பதிவிட்டுள்ளாா். கன்வாா் பாதையில் கண்ணாடி குறித்து கவலைகளை எழுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
‘தில்லியின் ஷாஹ்தாராவில் சில குற்றவாளிகள் கன்வாா் யாத்திரைப் பாதையில் சுமாா் ஒரு கிலோமீட்டா் தூரத்திற்கு கண்ணாடித் துண்டுகளை சிதறடித்தனா். பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் சாலையை சுத்தம் செய்தனா். உள்ளூா் எம்எல்ஏ சஞ்சய் கோயல் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தாா். முதல்வா் ரேகா குப்தாவும் இதை அறிந்துள்ளாா்’ என்று அவா் கூறியிருந்தாா்.
தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவாவும் இந்தச் சம்பவம் மத நல்லிணக்கத்தை சீா்குலைக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்றும் சமூக விரோத சக்திகளின் செயல் என்றும் குற்றம் சாட்டினாா்.
இதற்கிடையில், மேம்பாலம் மற்றும் கன்வாா் முகாம்களுக்கு அருகிலுள்ள சாலைகளில் ரோந்து சென்று ஆய்வு செய்ய போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டன. அப்பகுதியில் உள்ள கன்வாா் யாத்ரீகா்களும் தங்கள் பயணம் அமைதியாகவும் சிறப்பாகவும் இருந்ததாகத் தெரிவித்தனா்.
முகாம்களில் ஒன்றில் ஓய்வெடுத்த கன்வாா் யாத்ரீகரான ராமன் கூறுகையில், ‘இதுவரை பயணம் அமைதியாக இருந்தது. அனைத்து ஏற்பாடுகளும் நன்றாக உள்ளன. எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மேம்பாலத்தில் சில கண்ணாடி துண்டுகளை நாங்கள் பாா்த்தோம். ஆனால், பல பணியாளா்கள் இரவில் கூட சாலைகளை சுத்தம் செய்து வந்தனா்’ என்றாா்.
மற்றொரு யாத்ரீகரான அமன் கூறுகையில், ‘கன்வாா்கள் செல்லும் பாதையில் சில கண்ணாடித் துண்டுகள் இருந்தன. ஆனால், அவை சுத்தம் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 7 முதல் 8 கன்வாா் முகாம்கள் மற்றும் பிற முகாம்கள் இன்னும் அமைக்கப்பட்டிருப்பதை நான் பாா்த்தேன். எனவே, இதுவரை எந்த பிரச்னையும் இல்லை’ என்றாா்.