கபாலி கற்பகாம்பாள் திருக்கல்யாணம்
"மயிலையே கயிலை; கயிலையே மயிலை' என்ற பெருமையுடையது சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலாகும். இத்தலத்தில் பார்வதிதேவி மயிலாக வடிவெடுத்து, புன்னை மரத்தடியில் லிங்கத்தை நிறுவி பூஜித்து கபாலீஸ்வரர் அருள் பெற்று கற்பகாம்பாளாக விளங்கி, திருக்கல்யாணம் நடைபெற்ற புண்ணியத் தலம்.
முருகன் அம்பிகையிடம் வேல் பெற்றது, ராமர் பூஜித்தது, திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப் பெற்றது, அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப் பெற்றது, திருஞானசம்பந்தரால் சிவநேசன் செட்டியாரின் மகள் அஸ்தியை உயிர்ப்பித்து பூம்பாவையாக்கியது, அறுபத்து மூவர் விழா உள்ளிட்ட சிறப்புகளையும் கொண்ட தலம் இது.
இந்தக் கோயிலில் பங்குனியில் 10 நாள்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பானது. இந்தச் சிறப்புமிகு விழாவில் கபாலீஸ்வரர் }கற்பகாம்பாள் திருமண விழா, பிரம்மோற்சவ நேரங்களைக் குறிப்பிட்டு இறைவனிடம் விண்ணப்பிப்பதாக விளங்கும் "லக்கின பத்திரிகை வாசித்தல் விழா' சிறப்புற நடைபெறும்.
விழாவில் எந்த நாளில், எந்த நேரத்தில் பந்தக்கால் அமைப்பது, முளைப்பாரி இடுவதற்குரிய மண்ணை சேகரிக்கும் நேரம், கொடியேற்றம் செய்வது, வெள்ளி ரிஷப வாகனப் புறப்பாடு, திருத்தேர் வடம் பிடித்தல், திருக்கல்யாண உற்சவம், கொடியிறக்கம் உள்ளிட்ட விழாக்களின் அட்டவணைகள் முடிவு செய்யப்படும்.
இந்த விழா மாசி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்றும், சில ஆண்டுகளில் தை மாத திருவாதிரையிலும் அமையும். அன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீ சோமாஸ்கந்த மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறும். பின்பு அலங்காரம் செய்யப்படும்.
அதே நேரத்தில் கருவறை முன் மண்டபத்தில் சிவாச்சாரியார் பங்குனி பிரம்மோற்சவ கால நேரங்களை சுவாமியின் ஒப்புதலுக்காக படிப்பார். இந்த விழா வரும் மார்ச் 8}இல் (சனிக்கிழமை) மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. கோயிலை சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி எழுப்பியதில் பெரும்பங்காற்றிய மயிலை நாட்டு முத்தியப்ப முதலியார் வழிவந்த பூந்தமல்லி உயர் துளுவ வேளாளர் மரபினர் ஆண்டுதோறும் சிவனடியார்களின் ஆதரவோடு நடத்திவருகின்றனர்.
பனையபுரம் அதியமான்