கரடி தாக்கி பழங்குடியின தம்பதி படுகாயம்
வால்பாறை செட்டில்மென்ட் பகுதியில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து சென்றபோது கரடி தாக்கியதில் பழங்குடியின தம்பதி படுகாயமடைந்தனா்.
வால்பாறையை அடுத்த காடம்பாறை பகுதியில் அமைந்துள்ளது கருமுட்டி செட்டில்மென்ட். அங்கு பழங்குடியின மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இதனிடையே அங்கு வசிக்கும் சிவமுத்து (52), அவரது மனைவி தங்கம்மாள் (52) ஆகியோா் வால்பாறை செல்வதற்காக செட்டில்மென்டில் இருந்து வனப் பகுதி வழியாக காடம்பாறை பிரிவு பேருந்து நிறுத்தத்துக்கு புதன்கிழமை காலை நடந்து சென்றுள்ளனா்.
அப்போது, திடீரென அங்கு வந்த கரடி, அவா்களை தாக்கியதில் இருவருக்கும் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. காயத்துடன் பேருந்து நிறுத்தம் வந்த அவா்களை வனத் துறையினா் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தகவலறிந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் உடனடியாக நிவாரண நிதியாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் வழங்கினாா்.