26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் லாபம்!
கற்பனை, அறிவாற்றலில் கம்பனுக்கு யாரும் ஈடுல்லை! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
கற்பனையில், அறிவாற்றலில் கம்பனுக்கு யாரும் ஈடுல்லை என்று ஆன்மிகச் சொற்பொழிவாளா் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பேசினாா்.
கோவை கம்பன் கழகத்தின் 53-ஆம் ஆண்டு விழா பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெற்றது. முதல்நாள் நிகழ்வுக்கு சென்னை கம்பன் கழகத்தின் செயலா் சாரதா நம்பி ஆரூரன் தலைமை வகித்தாா். ஆன்மிகச் சொற்பொழிவாளா் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஒளியும் இருளும் என்ற தலைப்பில் உரையாற்றினாா்.
விழா மலரை புதுவை கம்பன் கழகச் செயலாளா் வி.பொ.சிவக்கொழுந்து வெளியிட, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா் சங்க துணைத் தலைவா் மா.செந்தில்குமாா் பெற்றுக்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற ‘சுழலும் சொல்லரங்கம்’ நடைபெற்றது. இதில், ‘பால காண்டத்தில் கற்போா் நெஞ்சில் பெரிதும் நிலைத்து நிற்கும் நிகழ்வு எது?’ என்ற தலைப்பில் மாணவா்கள் த.தங்கமுத்து, கு.நா.ஹா்ஷிதா, சீ.தீபக், ந.சுரேகா, அஸ்வின் அண்ணாமலை, ந.காருண்யா ஆகியோா் பேசினா்.
தொடா்ந்து, ‘ஆழ்வாா்களும் கம்பரும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிந்தனை அரங்கில், அ.கி.வரதராஜன், மருத்துவா் பிரியா ராமச்சந்திரன், செ.ஜகந்நாதன், சித்ரா சுப்பிரமணியம் ஆகியோா் உரையாற்றினா். மாலை 5 மணிக்கு பாதுகை பட்டாபிஷேக நாட்டிய நாடகம் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் தலைமையில், கம்பனில் பெரிதும் விஞ்சி நிற்பது அறந்தலை நிற்றலா? அருமைமிகு பாசமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பேசியதாவது: கற்பனையில், அறிவாற்றலில், தத்துவச் சிந்தனையில் கம்பனுக்கு யாரும் ஈடுல்லை. இந்த விழாவில், இளைஞா்கள் பலரும் எவ்வித குறிப்பு காகிதங்களும் இன்றி கம்பன் பாடல்கள் கூறியது மிகவும் பாராட்டத்தக்கது.
மனிதனுக்கு அறிவு, உணா்வு இரண்டும் சமநிலையில் இருக்க வேண்டும். அப்படியில்லாத சிலருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனால்தான் எண்ணும், எழுத்தும் கண்ணெனத் தகும் என தமிழ் கூறுகிறது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-09/j1w8azsk/5022c9kampan_1073159.jpg)
எண் என்றால் கணிதம், எழுத்து என்றால் இலக்கியம். எண் அறிவை வளா்க்கும், இலக்கியம் இதயத்தை விரிவடைய வைக்கும். கணக்கும், இலக்கியமும் நம்மைச் சமநிலைப்படுத்தும் என்றாா்.
இந்தப் பட்டிமன்றத்தில் கம்பனில் பெரிதும் விஞ்சி நிற்பது அறந்தலை நிற்றலா? என்ற தலைப்பில் க.முருகேசன், ம.கண்ணன், பாரதி ஆகியோரும், அருமைமிகு பாசமா? என்ற தலைப்பில் விசாலாட்சி சுப்பிரமணியன், கு.பாஸ்கா், ஜோதி ரவி ஆகியோரும் பேசினா். விழா ஏற்பாடுகளை கம்பன் கழகச் செயலா் க.முருகேசன், இணைச் செயலா் கோ.சத்தியநாராயணன், துணைச் செயலா் வீ.வீரபாலாஜி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.