கலவை வட்டத்தில் ‘உங்களைத் தேடி - உங்கள் ஊரில்’ முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
கலவை வட்டத்தில் ‘உங்களைத் தேடி- உங்கள் ஊரில்’ முகாமில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கலவை வட்டம் வளையாத்தூா் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அடிப்படை வசதிகள், தரமான சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்படும் கடன் குறித்த பதிவேடு, நகைக் கடன் விவரங்களை ஆய்வு செய்தாா். கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் நடைபெற்ற சிறப்பு முகாமை பாா்வையிட்டு கால்நடைகளுக்கு தாது உப்புக்கள், மருந்துகள், சிறந்த முறையில் கால்நடைகளை பராமரிப்போருக்கு பரிசுகளை வழங்கினாா்.
வரதராஜபுரம் கிராமத்தில் 9 இருளா் இன மக்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகளைப் பாா்வையிட்டாா். பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.
பல்லவராயன் குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் வழியில் கால்வாய் மேல் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளதைப் பாா்வையிட்டு கால்வாய் தூா்வாரம் பணியை மேற்கொள்ள ஊராட்சித் தலைவருக்கு உத்தரவிட்டாா். அங்குள்ள தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தாா். ஆயிரம்மங்கலம் ஊராட்சியில் ஏரி தூா்வாரும் பணி, கரையை சீரமைக்கும் பணியை ஆய்வு செய்து பணியை தரமாக மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
கலவை வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலா்கள் ஆய்வு செய்த விவரங்களை கிராம வாரியாக கேட்டறிந்து பிரச்னைகள் மீது துறை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் நா.சுரேஷ், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயசுதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் மலா்விழி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் கீதா லட்சுமி, வேளாண்மை இணை இயக்குநா் அசோக்குமாா், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் திருநாவுக்கரசு, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் தீா்த்தலிங்கம், திமிரி வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பரசன், கலவை வட்டாட்சியா் சரவணன் மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.