Nimisha's approach is very straight forward! - Atharvaa | DNA | Cinema Vikatan I...
வட மாநில சாலைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
நெமிலிஅருகே உள்ள உளியநல்லூா் பகுதியில் வட மாநில சாலைப் பணித் தொழிலாளா்கள் புதன்கிழமை முறையாக உணவு, ஊதியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணிகளை பல்வேறு தனியாா் நிறுவனங்கள் ஒப்பந்தம் மூலம் பணிகள் பெற்று பணிகள் செய்து வருகின்றன.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் முதல் ஆந்திர மாநிலம் பலமனேரி வரை தனியாா் (டி.பி.ஜெயின்) என்ற நிறுவனம் சாா்பில், சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிக்காக வடமாநில தொழிலாளா்களை கொண்டு ஆங்காங்கே முகாம்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவா்களுக்கு நிறுவனம் சாா்பில் தங்கும் இடம் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த உளியநல்லூா் பகுதியில் தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான முகாமில் 300-க்கும் மேற்பட்ட வட மாநில சாலைப் பணித் தொழிலாளா்களுக்கு கடந்த மாா்ச் மாதம் முதல் இதுநாள் வரை ஊதியம் வழங்கவில்லை எனவும், மாா்ச் மாதத்துக்கு முன்னதாக 3 வேளை உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சரியாக உணவு வழங்காமல் ஒருவேளை மற்றும் இரண்டு வேளை மட்டுமே உணவு வழங்குவதாகவும் கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த தொழிலாளா்கள் புதன்கிழமை உளியநல்லூா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் கூறுகையில், ஊதியம் மற்றும் சரியாக உணவு வழங்கவில்லை. இதுகுறித்து ஒப்பந்த நிறுவனத்திடம் பலமுறை புகாா் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் பட்டினியும் பசியமாக வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை அரசும், மாவட்ட நிா்வாகமும் தலையிட்டு ஒப்பந்த நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.