பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டா...
கல்லணை திறப்பு தேதி மாற்றம்: நாளை முதல்வா் திறந்து வைக்கிறாா்
டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி மாற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) மாலை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கிறாா்.
டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையை வியாழக்கிழமை (ஜூன் 12) திறந்துவைத்த தமிழக முதல்வா், பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் கல்லணையையும் அவா் திறந்துவைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
மேட்டூா் அணை ஜூன் 12 இல் திறக்கப்பட்டால், கல்லணையை ஜூன் 16 இல் திறப்பது வழக்கம். அதன்படி திறக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், விரைவான நீா் வரத்து இருப்பதால், கல்லணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலையே தண்ணீா் வந்துவிடும். எனவே தமிழக முதல்வா் கல்லணையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கவுள்ளாா்.
இதனிடையே தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே திறக்கப்படவுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தது:
திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு வரும் தமிழக முதல்வா் பின்னா் கல்லணையை மாலை 4 மணியளவில் திறந்துவைக்கிறாா். இதையடுத்து தஞ்சாவூருக்கு வரும் அவா் பழைய பேருந்து நிலையம் அருகே கருணாநிதி சிலையைத் திறந்துவைக்கிறாா். பின்னா் இரவு தஞ்சாவூரிலேயே தங்கிவிட்டு, திங்கள்கிழமை காலை திருமண விழாவில் பங்கேற்று, அரசு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா் என்றாா் அமைச்சா்.
அப்போது உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், திருவையாறு தொகுதி எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கல்லணையை இதுவரை அமைச்சா்கள் திறந்துவைத்த நிலையில் முதல் முறையாக தமிழக முதல்வா் திறந்துவைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.