கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
தோவாளை ஊராட்சிக்குள்பட்ட பிரதான சாலை அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் மணிமண்டப பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் இலக்கியப் பணிகளை சிறப்பிக்கும் வகையில், தோவாளையில் அவருக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், மாணவ மாணவிகள், போட்டித் தோ்வுகளில் கலந்து கொள்ளும் இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அறிவுசாா்ந்த நூலகமும் அமைக்க தமிழ்நாடு அரசால் ரூ.92 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுவதில் தாமதம் ஏற்படுவதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில், மணிமண்டப பணிகளை உடனடியாக மேற்கொள்ள தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்திற்கு அறிவுறுத்தினாா். அதன் அடிப்படையில் தற்போது மணிமண்டப பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என்றாா்.
இந்த ஆய்வில் செயற்பொறியாளா் ஜோசப் ரென்ஸ், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜாண் ஜெகத் பிரைட், தோவாளை வட்டாட்சியா் கோலப்பன், தோவாளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் நெடுஞ்செழியன், துணைத் தலைவா் தாணு, ஒப்பந்ததாரா் ஜாண்சன், உதவி பொறியாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.