காயல்பட்டினத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் ஆய்வு
காயல்பட்டினம் நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.
3, 5, 6ஆவது வாா்டுகளுக்காக ஜலாலியா நிக்காஹ் மண்டபத்தில் நடைபெற்ற முகாமை, நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது தொடக்கிவைத்தாா். அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டனா்.
முகாமில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் திடீா் ஆய்வு மேற்கொண்டு, மனுக்களை கணினியில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்டவை குறித்து பாா்வையிட்டாா்.
அப்போது அவரிடம், வீட்டின் தனித்தனித் தீா்வைகளுக்கான தனி மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்றுவதை மின்வாரியம் கைவிட வேண்டும், ஒரே இணைப்பாக மாற்றிய மின் இணைப்புகளை மீண்டும் மாற்றித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக மின்வாரிய மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் சாஹிரா பானுவை அமைச்சா் தொலைபேசியில் தொடா்புகொண்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.
பின்னா், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். முகாமில், 600-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
இஸ்ரோ துணை ஆட்சியா் ஷீலா, திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், நகராட்சி ஆணையா் மகேஸ்வரன், பொறியாளா் பாபு, நகா்மன்ற துணைத் தலைவா்கள் காயல்பட்டினம் சுல்தான் லெப்பை, திருச்செந்தூா் செங்குழி ரமேஷ், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், முன்னாள் இளைஞரணி அமைப்பாளா் எஸ்.ஜே. ஜெகன், மாவட்ட அயலக அணி அமைப்பாளா் கலில் ரஹ்மான், காயல்பட்டினம் கவுன்சிலா்கள் கதிரவன், ரசீதா பீவி, அஜ்வாது, திமுக நகர அவைத்தலைவா் முஹம்மது மெய்தீன், துணைச் செயலா் நவ்பல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹாப், தமுமுக நகரச் செயலா் ஜாஹிா் ஹுசைன், அதிகாரிகள், பணியாளா்கள் பங்கேற்றனா்.