காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது!
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிய இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிஸாவையொட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிஸா - வடக்கு ஆந்திரம் அருகே நாளை (ஆக. 19) கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 2 நாள்களுக்கு தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்றும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என அறிவித்திருந்தது.
இதையும் படிக்க | மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி