ADMK: `அதிமுக பலவீனமா இருக்கு, அதை சரிசெய்யத்தான் நான் இருக்கேன்' - சசிகலா பேசிய...
தவெக கொடிக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்!
தவெக கொடியை பயன்படுத்தத் தடைகோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் கொடியைப்போல தவெகவின் கொடி இருப்பதாகக் கூறி, தவெகவின் கொடி மீது தடைவிதிக்கக் கோரி, அவ்வமைப்பின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தநிலையில், இரு கொடிகளையும் பயன்படுத்தினால் மக்களிடையே குழப்பம் ஏதும் ஏற்படாது என்று வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வழக்கு விசாரணையின்போது,
இரு கொடிகளையும் ஒப்பிடும்போது, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் கொடியைத்தான் தவெக பயன்படுத்தியுள்ளதாகக் கூறிவிட முடியாது. இரு கொடிகளையும் பயன்படுத்தினால், தவெக கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் என்று கூற முடியாது. சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியைப் பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்ததுடன், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் தாக்கல் செய்த மனுவில், சிகப்பு, மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்தில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை கொடி உருவாக்க திட்டமிடப்பட்டு, கடந்த 2023 ஆம் ஆண்டில் தமிழக அரசு பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.
எங்களது சபையின் முதன்மை அதிகாரிகள், ஊழியர்கள், ஆண்கள், முகவர்கள், ஊழியர்கள், வாரிசுகள், வணிகத்தில் நியமிக்கப்பட்ட தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மட்டுமே இந்த வர்த்தக முத்திரையை பயன்படுத்த உரிமை உள்ளது. வேறு எந்த நபர்களும் கொடியை அனுமதியின்றி பயன்படுத்த முடியாது.
எனவே, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் சிகப்பு, மஞ்சள், சிகப்பு வண்ணங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் ஜூலை 17 ஆம் தேதியில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு தானே பொருந்தும். எப்படி அரசியல் கட்சியின் கொடிக்கு பொருந்தும்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு மட்டுமின்றி சேவைக்கும் பொருந்தும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கும் வர்த்தக முத்திரை பொருந்தும் என்று விளக்கம் அளித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.
இதையும் படிக்க:சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு!முதல்வரிடம் பாஜக வேண்டுகோள்!