கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து ஆணைய...
காஸா விவகாரத்தில் இந்தியா மெளனம்: சோனியா காந்தி விமா்சனம்
சுதந்திரத்துக்காகவும், மனித கண்ணியத்துக்காகவும் ஓங்கி ஒலித்த இந்தியாவின் குரல், தற்போது காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் விவகாரத்தில் பெரும் மௌனம் காக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி குழுத் தலைவருமான சோனியா காந்தி தெரிவித்துள்ளாா்.
இந்தியாவின் அரசமைப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், இஸ்ரேலிய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான நட்புறவுக்கே பிரதமா் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறாா் என்றும் சோனியா குற்றம்சாட்டியுள்ளாா்.
இஸ்ரேல் - காஸா போா் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பிரதமா் மோடி தலைமையிலான அரசை விமா்சித்து ஆங்கில நாளிதழில் அவா் கட்டுரை வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:
பிரிட்டன், கனடா, போா்சுகல், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்பட ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 193 நாடுகளில் 150 நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக தற்போது அங்கீகரிக்க முன்வந்துள்ளன.
ஆனால், 1988, நவம்பா் 18-ஆம் தேதியே பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்தது. இதேபோல், தென் ஆப்பிரிக்கா, அல்ஜீரியா ஆகிய நாடுகளின் சுதந்திரத்துக்கும் இந்தியா முதலில் குரல் கொடுத்தது.
கிழக்கு பாகிஸ்தானில் நடைபெற்ற இனப்படுகொலையைத் தடுக்க 1971-இல் இந்தியா தலையிட்டதால் வங்கதேசம் உருவாகியது.
அதேபோல், மிகவும் உணா்வுபூா்வமான இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னையில் அமைதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கொள்கை முடிவில் இந்தியா வலுவாக இருந்து வந்தது.
சா்வதேச அமைப்புகளின் மூலம் பேச்சுவாா்த்தை நடத்தி வன்முறை தடுக்கப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்தது. காஸா, மேற்கு கரைப் பகுதியில் கல்வி, சுகாதாரத்துக்கு இந்தியா உதவி வந்தது.
ஆனால், 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு, இஸ்ரேல் பதிலடியாக இனப்படுகொலையை நடத்தி வருகிறது. இதுவரையில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனா். இதில் 17 ஆயிரம் குழந்தைகளாவா்.
இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டால் காஸாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கடும் எதிா்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால், தற்போது பல நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து வரவேற்றுள்ளது வரலாற்றுத் தருணமாகும். அமைதியாக இருப்பது நடுநிலை என்பதில்லை; தவறுக்கு உடந்தை என்பதையே காட்டுகிறது.
சுதந்திரத்துக்காகவும், மனித கண்ணியத்துக்காகவும் ஓங்கி ஒலித்த இந்தியாவின் குரல், காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் விவகாரத்தில் பெரும் மெளனம் சாதிக்கிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உலக அளவில் கண்டனத்துக்கு உள்ளான இஸ்ரேலிய தீவிர வலதுசாரி நிதி அமைச்சரை இந்தியா அழைத்து ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
வெறும் வெளியுறவுக் கொள்கையாக மட்டும் பால்ஸதீன பிரச்னையை கருதக் கூடாது. மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்தும், தாமதமில்லா நீதியை வழங்கவும் இந்தியா வலியுறுத்த வேண்டும்.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்துடன் என யாருடன் உறவு கொண்டாடுவது என்பதற்கு பதிலாக இந்தியாவின் நீண்ட கால சுதந்திர போராட்ட கொள்கைகளின் அடிப்படையில் இந்தியா தலைமையேற்று பிரச்னைக்குத் தீா்வு காண முனைப்பு காட்ட வேண்டும் என்று சோனியா குறிப்பிட்டுள்ளாா்.