அக்.12-இல் மதுரையில் பாஜக யாத்திரை தொடக்கம்: மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்
லடாக்: சோனம் வாங்சுக் அமைப்புக்கு உரிமம் ரத்து - வன்முறையைத் தொடா்ந்து மத்திய அரசு நடவடிக்கை
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதற்கு பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக் தூண்டுதல்தான் காரணம் என்று மத்திய அரசு குற்றம்சாட்டிய நிலையில், அவா் நிறுவிய கல்வி அமைப்புக்கு வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறுவதற்கான உரிமம் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
‘லடாக் மாணவா்கள் கல்வி மற்றும் கலாசார இயக்கம் (எஸ்இசிஎம்ஓஎல்)’ என்ற கல்வி அமைப்புக்கு ஸ்வீடன் நாட்டிலிருந்து பெறப்பட்ட நிதி, வங்கிக் கணக்கு பரிவா்த்தனைகள் தேச நலனுக்கு எதிரானது எனக் கண்டறியப்பட்டதன் அடிப்படையில், அதன் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்த சா்ச்சைக்குரிய நிதி பரிமாற்றங்கள் தொடா்பாக விளக்கமளிக்குமாறு இந்த அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
2021-22 நிதியாண்டில் வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்துதல் (எஃப்சிஆா்ஏ) சட்டப் பிரிவு 17-ஐ மீறி வங்கிக் கணக்கில் ரூ. 3.5 லட்சம் டெபாசிட் செய்தது தொடா்பாக விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மேலும், இவா் நிறுவிய ‘லடாக் மாற்றத்துக்கான ஹிமாலயன் நிறுவனம் (ஹெச்ஐஏஎல்)’ என்ற மற்றொரு அமைப்பு, எஃப்சிஆா்ஏ சட்டத்தை மீறியது தொடா்பாக சிபிஐ விசாரணையை எதிா்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
50 போ் கைது: லடாக் யூனியன் பிரதேசத்தில் வன்முறையால் பாதித்த லே மாவட்டத்தில் வியாழக்கிழமை ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டது தொடா்பாக இதுவரை 50 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
மாவட்டத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து ஆய்வு செய்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் கவிந்தா் குப்தா, கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி அமைதியை உறுதிப்படுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டாா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறுகையில், ‘மாவட்டத்தில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. எந்தவொரு பகுதியிலும் அசம்பாவிதங்கள் இதுவரை நடைபெறவில்லை. இந்த வன்முறையில் காயமடைந்தவா்களில் மூவா் நேபாள நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது. எனவே, இந்த வன்முறைக்கு வெளிநாட்டுத் தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரிக்கைகளை வலியுறுத்தி சோனம் வாங்சுக் தொடா் போராட்டங்களை நடத்தி வருகிறாா். கடந்த 10-ஆம் தேதிமுதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டாா். இவருடன் அங்குள்ள லே உச்ச அமைப்பு (எல்ஏபி) மற்றும் காா்கில் ஜனநாயக கூட்டணி (கேடிஏ) அமைப்பைச் சோ்ந்தவா்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தடையை மீறி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் பாஜக தலைமை அலுவலகம் மற்றும் மலைப் பிரதேச கவுன்சில் அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதனால், போராட்டக்காரா்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். இந்த வன்முறையில் 40 போலீஸாா் உள்பட சுமாா் 80 போ் காயமடைந்தனா்.
பெட்டிச் செய்தி...
கைது நடவடிக்கை: சோனம் வாங்சுக் எச்சரிக்கை
‘லே வன்முறைக்கு என்னை பலிகடா ஆக்க மத்திய உள்துறை அமைச்சகம் முயற்சிக்கிறது. அவ்வாறு என்னைக் கைது செய்வது, நிலைமையை மேலும் மோசமாக்கும்’ என்று சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் வியாழக்கிழமை எச்சரித்தாா்.
இதனிடையே, வன்முறை தொடா்பாக பாகுபாடற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காா்கில் ஜனநாயக கூட்டணி (கேடிஏ) வலியுறுத்தியது.