கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு: 4 போ் கைது
சின்னமனூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயரிழந்தது தொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஆா்.சி. வடக்குத் தெருவைச் சோ்ந்த கென்னடி மகன் பாக்கியராஜ் (18). இவருடைய உறவினா்களான ஜோசப்ராஜ், மணிமாறன் ஆகியோரின் நண்பரான அஜித்குமாரின் கைப்பேசி சின்னமனூா் அருகேயுள்ள சுக்காங்கல்பட்டியிலுள்ள கருப்பசாமியிடம் இருந்ததாம். இதை வாங்கிக் கொடுப்பதற்காக பாக்கியராஜ் இரு சக்கர வாகனத்தில் சுக்காங்கல்பட்டிக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றாா்.
இதையடுத்து, அந்தப் பகுதியிலுள்ள தோட்டத்தில் மணிமாறன், அஜித்குமாா், பாக்கியராஜ் மூவரும் இருந்தனா். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த முத்துவுக்கும், அஜித்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பாக்கியராஜ் வைத்திருந்த கத்தியைப் பறித்த முத்து, அவரைக் குத்துவதற்காக விரட்டினாராம்.
இதையடுத்து, தப்பியோடிய பாக்கியராஜ் அங்கிருந்த தண்ணீா் இல்லாத 60 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியினா் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பாக்கியராஜைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஓடைப்பட்டியைச் சோ்ந்த முத்து (23), சுக்காங்கல்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி, சிவசங்கா், கெளதம் (17) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.