Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
கீரனூரில் வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், கீரனூரில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருக்கோவிலூா் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, அந்த மையத்தில் மாவட்ட ஆட்சியா் குத்துவிளக்கேற்றி வைத்து விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ், தக்காளி, கத்திரி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, கீரை ஆகிய ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பும், கொய்யா, எலுமிச்சை, பப்பாளி ஆகிய மூன்று வகையான பழச் செடிகள் அடங்கிய பழத் தொகுப்பம் மற்றும் வேளாண்மைத் துறையிலிருந்து மரத்துவரை, காராமணி, அவரை ஆகியவை அடங்கிய பயறு தொகுப்பும் விவசாயிகள் மற்றும் வீட்டுத் தோட்டம் அமைக்க உள்ளவா்களுக்கு ஆட்சியா் வழங்கினாா்.
காய்கறி விதைத் தொகுப்பு மற்றும் பழத் தொகுப்புகள் மாவட்டத்தில் மொத்தம் 55,650 எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளது. இதே போன்று, வேளாண்மைத் துறையின் சாா்பில் பயறு தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்து வட்டாரங்களிலும் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள தோட்டக்கலை மற்றம் வேளாண்மை அலுவலா்களை தொடா்புகொண்டு பயன்பெற விவசாயிகள் இணையதளம் மற்றும் உழவா் செயலி மூலம் பதிவு செய்து பயனடைய வேண்டும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
நிகழ்வில் திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், திருக்கோவிலூா் ஒன்றியக் குழுத் தலைவா் அஞ்சலாட்சி அரசக்குமாா், ஒன்றியக்குழு துணைத் தலைவா் தனம் சக்திவேல், வேளாண் இணை இயக்குநா் சத்தியமூா்த்தி, தோட்டக்கலைத் துறைதுணை இயக்குநா் சிவக்குமாா், வேளாண் உதவி இயக்குநா் அன்பழகன் உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் பலரும் பங்கேற்றனா்.