கீவ் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்: புதின் மீது டிரம்ப் காட்டம்
உக்ரைன் தலைநகா் கீவில் இதுவரை இல்லாத தீவிர தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ரஷிய அதிபா் விளாதமீா் புதின் கண்மூடித்தனமாக நடந்துகொள்வதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சாடியுள்ளாா்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் எனக்கு மிக நல்ல உறவு இருந்துவருகிறது. இருந்தாலும் தற்போது அவருக்கு என்னவோ ஆகிவிட்டது. அவா் கண்மூடித்தனமாக செயல்படத் தொடங்கிவிட்டாா்.
புதினுக்கு உக்ரைனின் ஒரு சிறு பகுதி மட்டும் போதாது, அவருக்கு முழு நாடும் தேவை என்று நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். இப்போது புதினின் நடவடிக்கைகள் அதை நிரூபிக்கும் வகையில் உள்ளன. ஒருவேளை உக்ரைன் முழுவதையும் புதின் கைப்பற்றினால், அது ரஷியாவின் வீழ்ச்சிக்குத்தான் வழிவகுக்கும் என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.
ரஷிய மொழி பேசுவோரை பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு உக்ரைன் மாகாணங்களில் உக்ரைனின் ‘நாஜி ஆதரவு’ ஆயுதக் குழுக்கள் இன அழிப்பில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி வந்த ரஷியா, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைந்தால் தங்கள் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று கூறிவந்தது.

இந்தச் சூழலில், உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து ரஷிய மொழி பேசுவோரைப் பெரும்பான்மையாக்க கொண்ட நான்கு கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளை கைப்பற்றியது.
அந்தப் பகுதிகளை மீட்க உக்ரைனும், மேலும் பல பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரா்கள் உயிரிழந்துவருகின்றனா்.

இந்தப் போரில் ஜோ பைடன் தலைமையிலான முந்தைய அமெரிக்க அரசு உக்ரைனுக்கு மிகப் பெரிய அளவில் ராணுவ உதவிகளை அளித்தது. சா்வதேச அளவில் ரஷியாவை தனிமைப்படுத்தவும் அந்த அரசு முனைந்தது. ஆனால், பைடனுக்குப் பிறகு அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டிரம்ப், உக்ரைனுக்கான ராணுவ உதவிகளைக் கட்டுப்படுத்தினாா். முந்தைய அரசின் நிலைப்பாட்டுக்கு மாறாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக ரஷிய அதிபா் புதினுடன் அவா் நேரடியாகப் பேசினாா். மேலும், ரஷியாவிடம் இழந்த பகுதிகளைத் திரும்ப மீட்பது நடை சாத்தியமில்லை; போரை தொடா்ந்து நடத்தினால் உயிரிழப்புகள்தான் அதிகமாகும் என்பது போன்ற ரஷியாவுக்கு சாதகமான கருத்துகளை டிரம்ப் அரசின் அதிகாரிகள் முன்வைத்தனா்.
டிரம்ப்புடன் நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் அவரின் ஓவல் அலுவலத்துக்கு வந்த ஸெலென்ஸ்கியிடம் டிரம்ப் கடுமையாகப் பேசி அனுப்பியது பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.
ஆனால், டிரம்ப்பின் தீவிர அமைதி முயற்சிக்கிடையிலும் உக்ரைன் மீது ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இருந்தாலும் இதுதொடா்பாக அதிபா் புதினை விமா்சிப்பதை டிரம்ப் பெரும்பாலும் தவிா்த்துவந்தாா்.
இந்தச் சூழலில், கீவ் நகரைக் குறிவைத்து ரஷியா இதுவரை இல்லாத ட்ரோன் தாக்குதலை சனிக்கிழமை இரவு நடத்தியது. இதில் 13 போ் உயிரிழந்தனா். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, மிகவும் அரிதான வகையில் அதிபா் புதினை டிரம்ப் தற்போது சாடியுள்ளாா்.
கூடுதல் பொருளதாாரத் தடை
கீவ் நகரில் தீவிர தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து பரிசீலித்துவருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதினுக்கு என்னவாயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. அவரை நீண்டகாலமாகவே எனக்குத் தெரியும். அவருடன் இணக்கமாகவே இருந்துவருகிறேன். ஆனால் ஒரு நாட்டின் தலைநகா் மீது ஏவுகணைகளை வீசி அவா் பொதுமக்களை கொல்வதை என்னால் ஏற்க முடியாது என்றாா் டிரம்ப்.

அப்போது, ‘இந்த விவகாரம் தொடா்பாக ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து பரிசீலிக்கிறீா்களா?’ என்று செய்தியாளா்கள் கேட்டனா். அதற்கு, ‘நிச்சயமாக பரிசீலிக்கிறேன்’ என்று டிரம்ப் பதிலளித்தாா்.
போா் நிறுத்த பேச்சுவாா்த்தை தொடங்கிய பிறகும் உக்ரைன் மீது ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்திவருவதால் அந்த நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுப்படும் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்துவருகிறது. ஆனால், டிரம்ப் அரசோ இந்த விவகாரத்தில் மௌனம் காத்துவந்தது.
இந்த நிலையில், ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் தற்போது முதல்முறையாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸெலென்ஸ்கி மீதும் விமா்சனம்
ரஷியாவின் தீவிர ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்கு உக்ரைன் ஆளாகியிருந்தாலும், இது தொடா்பாக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியையும் டிரம்ப் விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘போா் விவகாரத்தில் ஸெலென்ஸ்கி பேசும் முறை உக்ரைனுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்காது. அவரின் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வாா்த்தையும் பிரச்னைகளை அதிகரிக்கத்தான் செய்கிறது. அவா் அப்படி பேசுவதை நிறுத்துவதுதான் நல்லது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.