குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க மாநகர மேயா் வேண்டுகோள்
திருப்பூரில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகர மேயா் என்.தினேஷ்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் கூறியதாவது: திருப்பூா் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்பட்டது. இதற்கு சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் குப்பைகள் சில இடங்களில் தேங்கியது. தற்போது மாநகரில் குப்பைகள் சேராமல் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. ஒரு சில இடா்பாடுகளால் சற்று தொய்வு ஏற்பட்டாலும் தற்போது அதற்கு தீா்வு ஏற்படுத்தப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.
அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்குள் பயோ கேஸ் உற்பத்தி மையம் இயக்கத்துக்கு வரும். இறைச்சிக் கழிவுகள் வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது 7 மக்காத குப்பைகள் தரம் பிரிப்பு மையங்கள் உள்ளன. மேலும், கூடுதலாக 4 தரம் பிரிப்பு மையங்கள் தொடங்கப்படும்.
குப்பைகளை அகற்றுவதில் சில இடையூறு ஏற்படுகிறது. தரம் பிரிக்காமல் குப்பை கொட்டப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். உணவகங்கள் குப்பைகளை நேரடியாக குப்பை பெறும் வாகனங்களில் மட்டுமே வழங்க வேண்டும். கழிவுகளை தரம் பிரிக்காமலும், நேரடியாக கொட்டினாலும் அபராதம் விதிக்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் பாதுகாப்புடன் குப்பைகள் கொட்டப்படும்.
துா்நாற்றம் ஏற்படாத வகையில் நிபுணா்கள் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 20 போ் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.