கோவில்பட்டி: திரைப்பட வசனம் பேசி இன்ஸ்டாகிராமில் சவால்; இளைஞரை எச்சரித்த போலீஸ்!
குல்தீப் யாதவ் பந்துவீச்சைக் கணிக்க முடியாது: முன்னாள் பாகிஸ்தான் வீரர்!
இந்திய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் புகழ்ந்து பேசியுள்ளார்.
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் வாசிம் அக்ரமின் பேட்டி பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் செப்.9ஆம் தேதி முதல் தொடங்கின. இதில் இந்திய அணி நேற்று (செப்.10) யுஎஇ அணியை எதிர்த்து விளையாடியது.
இந்தப் போட்டியில் யுஎஇ அணி 13.1 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, அடுத்து விளையாடிய இந்திய அணி 4.3 ஓவர்களில் 60/1 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் 2.1 ஓவர்களில் 7 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இவரைக் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் சோனி ஸ்போர்ட்ஸில் பேசியதாவது:
லெக்-ஸ்பின்னர், கூக்லி, ஃபிலிப்பர் - இங்கு உட்கார்ந்துகொண்டு என்னாலும் கணிக்க முடியவில்லை. ரீப்ளேவிலும் அதைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது.
குல்தீப் யாதவை மிகவும் இள வயதில் கேகேஆர் அணியில் சந்தித்து இருக்கிறேன். அவரும் முகமது ஷமியும் காலை உணவு. மதிய உணவு, இரவு உணவு, போட்டியின்போது என எப்போதும் என்னுடன் இருப்பார்கள்.
அவர்கள் போட்டியில் விளையாடாவிட்டாலும் எனதருகில் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு விக்கெட் எடுக்க வேண்டும் என்ற பசி அதிகமாக இருந்தது. குல்தீப் யாதவுக்கும் அது இருந்தது.
ஒருமுறை முகமது ஷமி என்னை விமான நிலையத்தில் காரில் கொண்டுவந்து விட்டார். ஏன் எனக் கேட்டேன்? அதற்கு அவர், ‘நீங்கள் பொதுவாக என்ன பேசினாலும் கேட்க வேண்டும்’ எனப் பதிலளித்தார்.
இருவருமே இந்திய நாட்டிற்காகச் சிறப்பாகச் செயல்படுவார்கள் எனக் கூறினார்.