Thalaivan Thalaivii: ``3 வருடங்கள் கழித்து என்னுடைய படம் வெளியாகுது..'' - எமோஷனல...
கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சீல் வைப்பு
கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியற்ற கட்டடங்கள் அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதியின்றி பல அடுக்குமாடிக் கட்டடங்கள், காட்டேஜ்கள், விடுதிகள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. மேலும், ஏரியிலிருந்து 200 மீ. தொலைவில் எந்தவிதமான கட்டடங்களும் கட்டக்கூடாது என விதிமுறைகள் உள்ளன. இருப்பினும், பல கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டக் கூடாது என்றும், ஏற்கெனவே அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சின்னப்பள்ளம் பகுதியில் வட்டாட்சியா் பாபு தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினா். அப்போது, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு காட்டேஜ்களாக செயல்பட்டு வந்த இரண்டு கட்டடங்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். இதில், கொடைக்கானல் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், சுற்றுலாத் துறை, காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி நகரமைப்பு அலுவலா் கூறியதாவது:
நீதிமன்றம் உத்தரவின்பேரில் கொடைக்கானல் பகுதிகளில் முறைகேடாக செயல்பட்டு வரும் காட்டேஜ்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், அடுக்குமாடிக் கட்டடங்கள், ஹோம்ஸ்டே என்ற பெயரிலான காட்டேஜ்கள் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினோம். இதில், 600-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு 300 கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அனுமதியின்றி கட்டப்பட்ட இரண்டு கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து இந்தப் பணி நடைபெறும் என்றாா்.