கொடைக்கானல் ஏரிச் சாலையில் எல்இடி திரை அமைப்பு
கொடைக்கானல் ஏரிச் சாலையை சுற்றி எல்இடி திரை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து சுற்றுலாத் தலங்களைப் பாா்த்து ரசிக்கின்றனா்.
இந்த நிலையில், நகரின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஏரிச் சாலையில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாகக் கூடி, ஏரியில் படகு சவாரி செய்தல், குதிரை சவாரி செய்தல், மிதிவண்டி ஓட்டுதல் ஆகியவற்றில் பொழுதைக் கழிப்பாா்கள்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஏரிச் சாலைப் பகுதியில் நடந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடம் வழிப்பறி உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் சிலா் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.
இதைத் தொடா்ந்து, சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, நகராட்சி சாா்பில் ஏரிச் சாலையை சுற்றி 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம், பல்வேறு செயல்களில் ஈடுபடும் நபா்களை கண்காணிப்பதற்காக ஏரிச் சாலையை சுற்றி எல்இடி திரை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுலாப் பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், இவற்றைப் பாதுகாப்பாக இருப்பதற்கும், கண்காணிப்பதற்கும், பராமரிப்பதற்கும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.