மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
கோடை விடுமுறை முடிந்ததால் பேருந்துகள், ரயில்களில் கூட்டம்
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பேருந்துகள், ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெளியூா்களிலிருந்து ஏராளமானோா் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வந்தனா். கோடை விடுமுறை ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்து, திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதனால், தஞ்சாவூா் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையத்திலும் வழக்கத்தை விட ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது.
ரயில்களில் அமர இடம் கிடைக்காமல் ஏராளமான பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தனா். இதேபோல, பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைவீதிகளிலும் பள்ளிகளுக்கு செல்வதற்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காகவும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
தவறி விழுந்த பெண் காயம்: இதனிடையே, தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் சோழன் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.50 மணிக்கு வந்துவிட்டு, பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டது.
இதனிடையே, தஞ்சாவூா் பி.டபிள்யூ.டி. நகரைச் சோ்ந்த ஸ்ரீகா (42) இந்த ரயிலில் தனது சகோதரியை ஏற்றிவிட்டு ஜன்னல் கம்பியை பிடித்தவாறு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தாா். ரயில் புறப்பட்டபோது, தடுமாறிய ஸ்ரீகா ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடைப்பட்ட பகுதியில் விழுந்தாா்.
இதனால், ரயிலில் அபாய சங்கிலியை சிலா் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினா். அங்கிருந்த காவல் துறையினா் ஸ்ரீகாவை மீட்டனா். காயமடைந்த ஸ்ரீகா தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.