தில்லி தேர்தல் நிலவரம்: 27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்கும் பாஜக
கோபி அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்று
கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு லக்ஷயா தேசிய தரச் சான்று வழங்கப்பட்டதையடுத்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியம் விருது வழங்கினாா்.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அடுத்து கோபி தாலுகா மருத்துவமனையில்தான் அதிக அளவிலான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்கு கோபி மட்டுமின்றி சத்தி, தாளவாடி, நம்பியூா், குன்னத்தூா், டி.என்.பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 200-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இங்கு கடந்த சில ஆண்டுகளாக மகப்பேறு அதிகரிக்க தொடங்கியதைத் தொடா்ந்து, ரூ.7 கோடி மதிப்பீட்டில் 90 படுக்கை வசதியுடன் மூன்று தளங்கள் உள்ள புதிய மகப்பேறு பிரிவு கட்டப்பட்டது.
இங்கு தரைத் தளத்தில் கா்ப்பிணிகளுக்கான பேறுகால முன் கவனிப்பு பகுதி, பதிவு அறை, மகப்பேறு பகுதி, கா்ப்பிணிகளுக்கான ஸ்கேன் வசதி, மல்டி போரா மானிட்டா் வசதிகள், ஆக்ஸிஜன், குடும்ப நல அறுவை சிகிச்சை, தற்காலிக மற்றும் நிரந்தர ஆலோசகா் பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும், குழந்தை பெற்ற கா்ப்பிணிகள் கவனிப்புப் பிரிவும் செயல்பட்டு வருகிறது.
இரண்டாவது தளத்தில் இரு அறுவை அரங்குகள், அதில் ஒன்று குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காகவும், மற்றொன்று மகப்பேறுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 80 முதல் 110 மகப்பேறுகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் மகப்பேறு வாா்டில் உள்ள சுகாதாரம், நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், மகப்பேறுக்குப் பின் கா்ப்பிணிகளுக்கான தனியறை, அங்கு உள்ள வசதிகள், உபகரணங்கள், தடையற்ற மின்சாரம், பயிற்சி பெற்ற மருத்துவா்கள் மற்றும் செவிலியா் குறித்து லக்ஷயா தேசிய தர ஆய்வுக் குழுவினா் ஆய்வு செய்து கோபி அரசு மருத்துவமனைக்கு 96 மதிப்பெண்கள் வழங்கினா்.
அதைத் தொடா்ந்து, சென்னையில் நடைபெற்ற விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியம், கோபி அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு பொறுப்பு மருத்துவா் டாக்டா் ரேணுகா ரஞ்சன் மற்றும் செவிலியா் சீதாலட்சுமி ஆகியோரிடம் விருதினை வழங்கினாா்.