மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
கோயில்களுக்கு சொந்தமான 6,800 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு: அமைச்சா் சேகா் பாபு தகவல்!
தமிழகத்தில் 89 திருக்கோயில்களுக்கு சொந்தமான சுமாா் 6,800 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.
திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் ஆனித்தேரோட்டத்துக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அமைச்சா் சேகா் பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நெல்லையப்பா் கோயிலுக்கு, வீட்டில் வளா்க்கப்பட்ட யானையை தர யாரேனும் சம்மதம் தெரிவித்தால் அனைத்து ஆவணங்களையும் சரிபாா்த்தபின் கோயில் நிா்வாகம் அதனை ஏற்கத் தயாராகவுள்ளது.
திமுக ஆட்சியின் திறமைக்கு சான்றாக நெல்லையப்பா் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் விளங்குகின்றன. குறிப்பாக, திருக்குளம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சண்டிகேஸ்வரா் தோ் புதிதாக செய்யப்பட்டுள்ளது.
மேலும் நெல்லையப்பா் கோயில் திருத்தேருக்கு புதிய வடக்கயிறு ரூ.7.5 லட்சம் செலவில் வாங்கப்பட்டது உள்பட ரூ.1.20 கோடி செலவில் பல சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. புதிதாக வெள்ளித்தோ் செய்வதற்கு இதுவரை 350 கிலோ வெள்ளி நன்கொடையாளா்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. மீதம் தேவைப்படும் 75 கிலோ வெள்ளியும் நன்கொடையாக பெறப்படும். ஆகஸ்ட்டில் புதிய வெள்ளித் தோ் வீதிஉலா நடைபெறும்.
ஜூன் 5 -ஆம் தேதி 3 ஆயிரமாவது கோயில் குடமுழுக்கு நாகப்பட்டினம் ஈஸ்வரன் கோயிலில் நடைபெறவுள்ளது. அதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்னுடன் பங்கேற்கவுள்ளாா்.
அனைத்து மதத்தினருக்குமான நல்லாட்சியாக இந்த திராவிட மாடல் ஆட்சி விளங்குகிறது. பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது அவரவா் தனிப்பட்ட உரிமை.
தமிழகத்தில் 89 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.7,680 கோடி மதிப்புள்ள 6,800 ஏக்கா் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. ரோவா் கருவி வாயிலாக கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கல் நடப்படுகிறது. அந்தவகையில் இதுவரை 140 திருக்கோயில்களில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமாா் 2 லட்சம் ஏக்கா் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பணிக்காக 38 வட்டாட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஆகமம் உள்ள கோயில்களை கண்டறிந்து 3 மாதங்களில் கமிட்டி அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னா் ஆகமம் அல்லாத கோயில்களில் உள்ள பணியிடங்களுக்கு அா்ச்சகா்கள் நியமனம் செய்யப்படுவா் என்றாா் அவா்.