'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பை: வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை
கோவை சா்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையை மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா்.
கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி, புணே, பெங்களூரு, ஹைதராபாத், ஷீரடி உள்ளிட்ட நகரங்களுக்கு 31 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, சிங்கப்பூா், ஷாா்ஜா, அபுதாபிக்கும் 3 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கோவை விமான நிலையத்தில் கடந்த சில நாள்களாக பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. விமான நிலையத்துக்குள் வரும் பயணிகளின் உடைமைகள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தின் புறப்பாடு பகுதி எதிரே புதன்கிழமை இரவு கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. இதைப் பாா்த்ததும் பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனா்.
பின்னா் மோப்ப நாய் உதவியுடன் பையை சோதனை செய்தனா். அத்துடன் வெடிகுண்டு நிபுணா்களையும் வரவழைத்து மெட்டல் டிடெக்டா் மூலம் பையை சோதனை செய்தனா். ஆனால், அதில் அச்சப்படும் அளவுக்கு வெடிபொருள்கள் எதுவும் இல்லை. துணிகள் மட்டுமே இருந்தன.
இதையடுத்து பயணி யாரேனும் பையைக் காணவில்லை என்று உரிய அடையாளங்களுடன் வந்தால் அந்தப் பை திருப்பிக் கொடுக்கப்படும் என்று அறிவித்து அதை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் எடுத்துச் சென்றனா்.