சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!
மண்ணச்சநல்லூர்: பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தைப்பூச பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சக்தி தலங்களில் முதன்மையாக விளங்குகிறது.
இத்திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா பிரசித்தி பெற்றது. உற்சவ அம்பாள் மலர் அலங்காரத்தில் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளினார். இதனையடுத்து கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு ஒம் சக்தி பராசக்தி சக்தி முழங்க காப்பு கட்டுதலுடன் கொடியேற்றப்பட்டு, மஹா தீபாரதனை நடைபெற்றது.
இவ்விழாவில் இன்று உற்சவ அம்மன் மரகேடயத்திலும், பிப். 3ம் தேதி மரசிம்ம வாகனம், பிப். 4ம் தேதி மரபூத வாகனம், பிப். 5ம் தேதி மர அன்ன வாகனம், பிப். 6ம் தேதி மர ரிஷப வாகனம், பிப். 7ம் தேதி மர யானை வாகனம், பிப். 8ம் தேதி வெள்ளி சேஷ வாகனம், பிப். 9ம் தேதி வெள்ளி குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.
இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
இவ்விழாவில் பிப். 10ம் தேதி தெப்பத் திருவிழாவும், விழாவின் முக்கிய நிகழ்வாக பிப். 11ம் தேதி திருக்கோயிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி வழி நடை உபயங்களை கண்டருளியபின் வடதிருக்காவேரியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
இதனையடுத்து பிப்.11ம் தேதி இரவு 10 மணி அளவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீர்பெறும் நிகழ்வும், பிப் 12ம் தேதி மகா அபிஷேகமும் தொடர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இந்நிகழ்வில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி இளங்கோவன், அறங்காவலர்கள் பெ. பிச்சைமணி, இராஜ.சுகந்தி, சே.லெட்சுமணன், மணியக்காரர் பழனிவேல் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.