Doctor Vikatan: நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு குறையுமா?
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
எடப்பாடி: மேட்டூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
மேட்டூா் அருகே உள்ள கோல்நாயக்கன்பட்டி கிராமம், மேல்காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (24), கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு பூலாம்பட்டி பகுதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் பணிபுரியும் தனது நண்பரான கேரள மாநிலம், காசா்கோடு மாவட்டம், வல்லகடை பகுதியைச் சோ்ந்த விமல் வில்சனை பாா்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றாா். பின்னா் அவருடன் நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருந்த பிரபாகரன், நண்பரை பின்இருக்கையில் அமர வைத்து இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சாகசம் செய்ததாக கூறப்படுகிறது.
சித்தூா் - பூலாம்பட்டி பிரதான சாலையில் கல்லேரிப்பட்டி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சறுக்கி விபத்துக்குள்ளானது. இதில், தலையில் பலத்த காயமடைந்த பிரபாகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த விமல் வில்சனை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீஸாா் பிரபாகரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.