`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிவந்த ‘ஃபாரிஷ்டே’ திட்டத்தை பாஜக அரசு நிறுத்திவிட்டது! - ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் ‘ஃபாரிஷ்டே தில்லி கே’ திட்டத்தை பாஜக தலைமையிலான தில்லி அரசு நிறுத்தியதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து தில்லியில் செய்தியாளா் சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ் கூறியதாவது: முந்தைய ஆம் ஆத்மி கட்சி அரசால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி ஆயிரக்கணக்கான உயிா்களைக் காப்பாற்றியது. ஆனால், இப்போது இந்தத் திட்டம் பாஜக அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. உயிா்களைக் காப்பாற்றும் இவ்வளவு நல்ல திட்டத்தை யாராவது எப்படித் தடுக்க முடியும்? பாஜக அரசு அதை பட்ஜெட்டில் இருந்து நீக்கியுள்ளது.
2017- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், விபத்தில் சிக்கியவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் முழு சிகிச்சைச் செலவையும் ஈடுகட்டியது. பாா்வையாளா்கள் நிதிச் சுமைக்கு பயப்படாமல் அவா்களுக்கு உதவ ஊக்குவித்தது. இந்த முயற்சியின் கீழ் 10,000-க்கும் மேற்பட்ட உயிா்கள் காப்பாற்றப்பட்டன.
நான் சுகாதார அமைச்சராக இருந்த காலத்திலும் கூட, தில்லி துணை நிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இந்தத் திட்டத்தை நிறுத்த முயன்றனா். இதனால், ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டியிருந்தது. அதன் பிறகு இந்த முயற்சியைத் தொடர நிதி விடுவிக்கப்பட்டது. ஆனால், இப்போது, ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக அதை முற்றிலுமாக நிறுத்திவிட்டது என்றாா் சௌரவ் பரத்வாஜ். ஆம் ஆத்மி கட்சியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பாஜகவிடமிருந்து உடனடி பதில் கிடைக்கவில்லை.
முதல்வா் ரேகா குப்தா சமா்ப்பித்த 2025-26 பட்ஜெட்டில், தில்லி அரசு, சுகாதாரத் துறைக்கு ரூ.12,893 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா, இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுதல் மற்றும் 16,186 மருத்துவமனை படுக்கைகளைச் சோ்த்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.