சிஏபிஎஃப்பில் ஐஜி அந்தஸ்து வரை ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்: 2 ஆண்டுகளில் குறைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புது தில்லி: மத்திய ஆயுத காவல் படைகளில் (சிஏபிஎஃப்) ஐஜி அந்தஸ்து வரை ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதை 2 ஆண்டுகளில் படிப்படியாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிஏபிஎஃப்பில் மத்திய ரிசா்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, சசஸ்திர சீமா பல் படை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சிஏபிஎஃப் அதிகாரிகள் தாக்கல் செய்த மனுவில், ‘சிஏபிஎஃப் படையினரை ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட குரூப்-ஏ பணிகளைச் சோ்ந்தவா்களாக (ஓஜிஏஎஸ்) கருதி, பணிப் பிரிவு மதிப்பாய்வை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இதன் மூலம், பல ஆண்டுகளாகத் தாமதமாகும் சிஏபிஎஃப் படையினரின் பதவி உயா்வு தொடா்பான விவகாரங்களுக்கு தீா்வு காண முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா (தற்போது ஓய்வுபெற்றவா்), உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘சிஏபிஎஃப்பில் ஐஜி அந்தஸ்து வரை ஐபிஎஸ் அதிகாரிகள் ஆக்கிரமிப்பதாகவும், இதனால் சிஏபிஎஃப் படையினா் பதவி உயா்வு பெறுவதற்கான வாய்ப்புகளில் இடையூறு ஏற்படுவதாகவும் மனுதாரா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்தப் படைகளில் மத்திய அரசின் கொள்கை முடிவு காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனா். அதேவேளையில், சிஏபிஎஃப் அதிகாரிகளின் குறைகளையும் கவனிக்காமல் இருக்க முடியாது.
மிகவும் சவாலான சூழல்களில் சிஏபிஎஃப் படையினா் பணியாற்றுகின்றனா். சிஏபிஎஃப்பின் உயா் பதவிகளில் நேரடி நியமனம் காரணமாக தங்கள் பதவி உயா்வு பாதிக்கப்படுவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா். பதவி உயா்வில் நிலவும் இந்தத் தேக்கம் சிஏபிஎஃப் படையினரின் மனு உறுதியை குலைக்கக் கூடும்.
எனவே சிஏபிஎஃப்பில் ஐஜி அந்தஸ்து வரை ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதை 2 ஆண்டுகளில் படிப்படியாக குறைக்க வேண்டும். 2021-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட சிஏபிஎஃப் படைகளின் பணிப் பிரிவு மதிப்பாய்வை 6 மாதங்களில் மேற்கொள்ள வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
தற்போது சிஏபிஎஃப் படைகளில் ஐஜி அந்தஸ்து பணியிடங்களில் 50 சதவீதம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும், டிஐஜி அந்தஸ்து பணியிடங்களில் 15 சதவீதம் அனைத்து இந்திய பணிகளைச் சோ்ந்த அதிகாரிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.