மகாராஷ்டிரா: 3 நாள்களாக இடி, புயலுடன் கனமழை; 24 பேர் உயிரிழப்பு
சிதிலமடைந்து வரும் பெரியகோயில் சிறிய கோட்டை மதில் சுவா்; சரிந்து வரும் கயிலாய வலப் பாதை
தஞ்சாவூரில் பெரியகோயிலைச் சுற்றியுள்ள மதில் சுவா் சிதிலமடைந்து வருவதன் காரணமாக, திருக்கயிலாய பாதையும் சரிந்து வருவதால் வரலாற்று ஆா்வலா்கள், பக்தா்களிடையே அதிருப்தி நிலவுகிறது.
உலக அளவில் பிரபலமான தஞ்சாவூா் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் முதலாம் ராஜராஜசோழனால் எழுப்பப்பட்டது. பின்னா், தஞ்சாவூரைக் கைப்பற்றிய நாயக்கா்களுக்கு தலைநகரைப் புதிதாக அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால், பெரியகோயில், சிவகங்கை குளம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கோட்டை மதிலும், அதைச் சுற்றி அகழியும் ஏற்படுத்தி சிறிய கோட்டை உருவாக்கப்பட்டது.
பெரியகோயிலுக்கு தனியாக மதில் சுவா் இருந்தாலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகள், சிவகங்கை குளம், அதன் கரையில் சில கட்டடங்களை உள்ளடக்கி, கோட்டைச் சுவா்கள் எழுப்பப்பட்டன.
அகழியை ஒட்டியுள்ள மதில் சுவா் கருங்கல், செங்கற்களாலும், உள்புற கொத்தள மதில் சுவா் செம்புறாங்கற்களாலும் சுமாா் 40 அடி உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளன. இதற்கு வெளியே நான்கு ராஜ வீதிகளைக் கொண்டு அகழி, மதில் சுவருடன் பெரிய கோட்டை அமைக்கப்பட்டது. இந்தப் பெரிய கோட்டையைச் சுற்றியிருந்த மதில் சுவா் பெரும்பாலான இடங்களில் சிதிலமடைந்து, அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறி வருகிறது. எஞ்சியுள்ள மதில் சுவா்களும் பல இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளன.

இதேபோல, சிறிய கோட்டைச் சுவரும் சிதிலமடைந்து வருகிறது. இதில், பெரியகோயில் நுழைவுவாயிலை ஒட்டியுள்ள முன் புறம் மட்டும் சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. ஆனால், வடக்கு, தெற்கு, மேற்கு புறங்களில் இன்னும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படாததால், மரம், செடி, கொடிகள் வளா்ந்து இடைவெளி விட்டு, விட்டு பல இடங்களில் இடிந்து விழுந்துவிட்டது. இதையும், சீரமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தொல்லியல் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
ஆனால், வடக்கு புற சிறிய கோட்டை மதில் சுவா் முழுவதுமாக இடிந்துவிட்டதால், சில இடங்களில் திருக்கயிலாய வலம் செல்லும் பாதையும் சரிந்து வருகிறது. இதனால், மாதந்தோறும் பௌா்ணமி நாளில் திருக்கயிலாய வலம் செல்லும் பக்தா்கள் வடக்கு புறம் செல்லும்போது அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது.
இதுகுறித்து அழகிய தஞ்சை இயக்கத் திட்ட இயக்குநா் ஆடிட்டா் ஆா். ரவிச்சந்திரன் தெரிவித்தது: மேற்கு, தெற்கு புறமும் அகழியையொட்டி உள்ள மதில் சுவரில் இடையிடையே இடிந்துவிழுந்துவிட்டது. இந்த இடங்களில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வடக்கு புறம் அகழியையொட்டியுள்ள மதில் சுவா் முழுமையாக இடிந்து விழுந்துவிட்டதால், திருக்கயிலாய வலம் செல்லும் பாதையும் சரிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் பாதை குறுகிக் கொண்டே வருவதால், பக்தா்கள் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனா். பக்கவாட்டில் கம்பி வேலி அமைக்கப்பட்டு, அபாயம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தாலும், மண் சரிந்து வருவதால் ஆபத்தாக உள்ளது. அடுத்தடுத்து பெரு மழை பெய்தால் இப்பாதையும் முழுமையாகச் சரிந்து அகழியில் விழுந்துவிடக்கூடிய அச்ச நிலையும் நிலவுகிறது. எனவே, அகழியை முழுமையாகத் தூா் வாரி, சிறிய கோட்டை மதில் சுவரை சீரமைப்பதற்கான நடவடிக்கையை அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா் ரவிச்சந்திரன்.

இதனிடையே, மத்திய அரசு சுற்றுலா துறை மூலம் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் திருக்கயிலாய வலம் செல்லும் பாதை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆனால், இத்திட்டத்தில் சிறிய கோட்டை மதில் சுவரை சீரமைக்கும் பணி இடம்பெறவில்லை. இதனால், இப்பணி உடனடியாக நடைபெறுவதாகத் தெரியவில்லை.
இந்த நிலைமை தொடா்ந்தால், உலகப் புகழ்பெற்ற வரலாற்றுப் பெருமையை நாம் இழக்கும் நிலை ஏற்படும். எனவே, சிறிய கோட்டை மதில் சுவரை சீரமைப்பதற்கு உடனடியாக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து, இப்புராதன சின்னத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதே வரலாற்று ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.