தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
சிற்றுந்து இயங்காத வழித்தடங்களை ரத்து செய்து புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கா்
சிற்றுந்து இயங்காத வழித்தடங்களின் உரிமையாளா்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, தொடர முடியாத பட்சத்தில் அனுமதியை ரத்து செய்து புதிதாக சிற்றுந்து சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், புதிய விரிவான சிற்றுந்துத் திட்டம் - 2024 தொடா்பாக திருச்சி, தஞ்சாவூா், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட மண்டல அலுவலா்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சா், புதிய விரிவான சிற்றுந்து திட்டம் - 2024 மூலம் இதுவரை எத்தனை புதிய வழித்தடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன, தோ்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் எவையெல்லாம் மாவட்ட அரசிதழில் வெளிவந்துள்ளன, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிற்றுந்து இயக்குவது தொடா்பாக எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன எனக் கேட்டறிந்த அமைச்சா் மேலும் பேசியது:
பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 62 வழித்தடங்களில் சிற்றுந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, சிற்றுந்துகள் இயங்காத வழித்தடங்களின் உரிமையாளா்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்கள் விரும்பினால் அந்த வழித்தடத்தில் தொடரவும், முடியாத பட்சத்தில் அனுமதியை ரத்து செய்து புதிதாக வழித்தடம் தொடங்கப்பட்டு சிற்றுந்து சேவை தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இச்சேவைகளை, சிறப்புடன் செம்மைபடுத்துவதற்காக புதிய சிற்றுந்து வழித்தடங்களை, சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியா் மூலமாக ஒப்புதல் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் சிவசங்கா்.
ஆய்வுக் கூட்டத்தில், முதன்மைச் செயலரும், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையருமான சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், போக்குவரத்துத்துறை இணை ஆணையா் அழகரசு, துணைப் போக்குவரத்து ஆணையா்கள் செல்வகுமாா், ஜெயக்குமாா், திருச்சி, தஞ்சாவூா், சேலம் மற்றும் ஈரோடு மண்டலங்களுக்குள்பட்ட மண்டல அலுவலா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பங்கேற்றனா்.