மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
சுகாதார நிலையம், அரசுக் கல்லூரி விடுதி திறப்பு
கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட அரசு வட்டார பொது சுகாதார நிலையம் மற்றும் திட்டக்குடியில் மிகப்பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் கட்டப்பட்ட அரசுக் கல்லூரி மாணவிகள் விடுதி ஆகியவற்றை தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், அமைச்சா் சி.வெ.கணேசன் பேசியதாவது: கடலூா் மாவட்டத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 68 கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 57 பள்ளி விடுதிகளும், 11 கல்லூரி விடுதிகளும் அடங்கும். திட்டக்குடி வட்டத்தில் 5 பள்ளி விடுதிகள் செயல்பட்டு வந்தன. தற்போது, திட்டக்குடியில் திறக்கப்பட்ட விடுதியில் கண்காணிப்பு கேமரா, கணினியுடன் கூடிய செம்மொழி நூலகம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளது என்றாா்.
நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் இரா.சரண்யா, துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் மருத்துவா் பொற்கொடி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.