'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
சூது கவ்வியதா? விஜய் சேதுபதியின் ஏஸ் - திரை விமர்சனம்!
படத்தின் முதல்காட்சியிலேயே ஜம்மென்று மலேசியா விமான நிலையம் வருகிறார் விஜய் சேதுபதி (போல்ட் கண்ணன்). அவரை அழைத்துச் செல்வதற்காகக் காத்திருக்கும் யோகி பாபு தன்னைப் பெரிய தொழிலதிபராகக் காட்டிக்கொள்கிறார். இருவரும் மலேசியாவில் சில ஜாலியான லூட்டிகளை அடிக்க, ருக்மணி வசந்த் கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அவர் ஒரு பிரச்னையில் இருக்க, வட்டிக்கு பணம் வாங்கச் சென்ற இடத்தில் விஜய் சேதுபதியும் புதிதாக ஒரு பிரச்னையை வளர்க்கிறார். இப்போது, இவர்களின் பிரச்னை தீர வேண்டுமென்றால் இந்திய மதிப்பில் ரூ. 2 கோடி தேவைப்படுகிறது. அப்பணத்திற்காக போல்ட் கண்ணன் ஒரு திட்டம் போடுகிறார். அத்திட்டத்தில் வென்றாரா இல்லையா? போல்ட் கண்ணன் யார்? என்பதே மீதிக்கதை.
மகாராஜா படத்திற்குப் பின் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படமென்பதால் சில எதிர்பார்ப்புகள் இருந்தன. அதற்கேற்ப ஆரம்பக் காட்சிகள், நகைச்சுவைகள் என இப்படத்தில் எல்லாம் அழகாகக் பொருந்தியிருக்கின்றன. சென்னையில் படமாக்கப்பட்டால் இக்கதைக்கு ஒரு விலகல் உருவாகிவிடும் என்பதற்காக மலேசியாவில் திட்டமிட்டதும் நன்று. இயக்குநர் ஆறுமுக குமார் தேர்ந்த இயக்குநராக எதை எடுக்க வேண்டும்; தவிர்க்க வேண்டும் என தொழில்நுட்ப ரீதியாகக் கவனமாக இருந்திருக்கிறார்.
விஜய் சேதுபதியிடமிருந்து பெரிய நடிப்பு வெளிப்படமால் பார்த்துக் கொள்வதும் கதாபாத்திரங்களின் குணங்களுக்கு ஏற்ப அவற்றை எதார்த்தமாகவிட்டதும் சிறப்பு. முக்கியமாக, ருக்மணி வசந்த் வரும் காட்சிகள் கதைக்கு பலமாக இருந்தன. மலேசியாவிலேயே முழுப்படத்தையும் எடுத்திருப்பதால் உருவாக்கமும் நன்றாக இருக்கின்றன. விஜய் சேதுபதி - ருக்மணிக்கு இடையேயான காதல் மலரும் தருணங்களும் ரசனையுடன் எடுக்கப்பட்டுள்ளது. முதல்பாதியில் பல இடங்களில் ரசிகர்களைச் சிரிக்க வைப்பதால் இரண்டாம்பாதி மீதான ஆர்வத்துடனே இடைவேளை அமைந்திருக்கிறது.

ஆனால், சுவாரஸ்யமான கதையில் சில திருப்பங்களை இன்னும் அழுத்தமாக உருவாக்கியிருந்தால் இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்திருக்கும். நகைச்சுவைக் காட்சிகளில் கவனம் செலுத்திய இயக்குநர் கதையிலும் திரைக்கதையிலும் சின்ன சொதப்பலைச் செய்திருக்கிறார்.
வசனங்களைக் கவனமாகக் கையாள வேண்டாமா? ஒரு காட்சியில் விஜய் சேதுபதி குப்பை பொறுக்கும் யோகி பாபுவை, ‘காகிதம் பொறுக்கிதானடா நீ” எனத் திட்டுகிறார். குப்பையை அப்புறப்படுத்தும் தொழிலாளர்களைக் கொச்சைப்படுத்துவதுபோல் இருக்கிறது.
மேலும், படத்தின் வில்லன் தமிழர், பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டும் காவல் அதிகாரியான பப்லு பிருத்விராஜும் தமிழர், மலேசியாவிலுள்ள கெட்டவர்களெல்லாம் தமிழர்களாகத்தான் இருப்பார்களோ என்பதுபோல் காட்சிகள் பதிவாகின்றன. இன்னொன்று, நம்மூரில் வங்கி வாகனத்தைக் கொள்ளையடித்தால் ஏற்றுக்கொள்ளலாம். மலேசியா அரசு வைத்திருக்கிற பாதுகாப்பு முன்னெச்சரிகைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் பரபரப்பான சாலையில் சுலபமாகக் கொள்ளையடித்துவிட்டு தப்பிக்க முடியுமா? அக்காட்சியின் நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்க வேண்டும்.
இரண்டாம்பாதியில் சில ஆக்சன் காட்சிகள் நன்றாக அமைந்திருக்கின்றன. கிளைமேக்ஸ் காட்சியும் சலிப்பை ஏற்படுத்தாத வண்ணம் முடிந்திருப்பது படத்தைக் காப்பாற்றுகிறது.
நடிகர் விஜய் சேதுபதியை மகாராஜாவுக்குப் பின் பார்ப்பதால் சில மாறுதல்கள் தென்பட வேண்டும் என்பதற்காக சுவாரஸ்யமான கதாபாத்திரமாகத் தன் உடல்மொழியைக் காட்டிக்கொள்கிறார். யோகி பாபுவுடன் சூதாட்டத்தில் பங்கேற்கும் காட்சி அழகாக உருவாக்கப்பட்டிருந்தது.
ருக்மணி வசந்த்தை படத்தின் தூண் என்றாலும் மிகையாகாது. அதிகக் காட்சிகள் இல்லையென்றாலும் தன் முதல் தமிழ்ப்படத்தில் தமிழ்ப்பெண்ணாக அடையாளப்படுத்தும் முயற்சியில் வென்றிருக்கிறார். ருக்மணியின் தோற்றம் கச்சிதமாக இருப்பதால் விரைவில் தென்னிந்திய சினிமாவில் நட்சத்திரமாக உருவெடுக்கலாம்.

யோகி பாபுக்கும் நல்ல படமாகவே அமைந்துள்ளது. பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். வில்லனிடம் போய் அடிவாங்க தள்ளுபடி கேட்கப்போவதாகக் கூறும் காட்சிகளில் தன் அசத்தலான உடல்மொழியில் விசில் சப்தங்களைப் பெறுகிறார். உண்மையில், யோகி பாபு இல்லையென்றால் இப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் சிக்கலையே சந்திருக்கும். நடிகர்கள் திவ்யா பிள்ளை, பப்லு பிரித்விராஜும் நல்ல தேர்வுகள்.
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியிருக்கும் இப்படம் மேக்கிங் ரீதியாக அவரை விஷயம் தெரிந்த இயக்குநராக அடையாளப்படுத்துகிறது. பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு விஜய் சேதுபதி தப்பிக்கும் காட்சி ஓர் உதாரணம். நகைச்சுவைகளில் கொஞ்சம் சமூகப் புரிதலையும் சிந்தித்தால் திறமையான இயக்குநராவார்.
படத்திற்கு நல்ல பங்களிப்பைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கரண் பி ராவத். காலையிலும் இரவிலும் மலேசியாவின் அழகைக் காட்டி கதைக்குள்ளேயே வைத்திருப்பது சிறப்பு. சண்டைப் பயிற்சியாளரின் பணியும் நிறைவாகவே இருந்தது. திரைக்கதையிலும் கதையிலும் இன்னும் சுவாரஸ்யத்தைச் சேர்த்திருந்தால் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும். சில குறைகள் இருந்தாலும் சோர்வில்லாத திரைப்படமாகவே ஏஸ் உருவாகியிருக்கிறது.
இதையும் படிக்க: ஜனநாயகனுடன் மோதும் பராசக்தி? இயக்குநர் விளக்கம்!