சென்னையில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது.
சென்னையில் வழக்கம்போல் வெய்யிலுடன் தொடங்கியது இன்றைய நாள்.. சொல்லி வைத்ததுபோன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் சட்டென்று வானிலை மாறி, மேகங்கள் ஒன்றாகக் கூடிய நிலையில் திடீரென கனமழை பெய்து வருகின்றது. இதனால் வெய்யிலின் தாக்கத்திலிருந்து மக்கள் ஓரளவு தணிந்துள்ளனர்.
அதேபோன்று நேற்றும் சென்னையில் பிற்பகல் 3 மணியளவில் சுமார் 40 நிமிடங்கள் கனமழை பெய்து பூமியை குளிர்வித்தது.
சென்னையில் அம்பத்தூர், அன்னாநகர், ஆவடி, கோயம்பேடு, போரூர், கொளத்தூர், பட்டரவாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் கனமழை வெளுத்துவாங்கி வருகிறது.
அதோடு தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
அதேசமயம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.