சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!
செபி தலைவா் மாதபி புச் மீது நடவடிக்கை எடுக்க மும்பை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை
பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவா் மாதபி புரி புச், உள்பட 6 பேருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஊழல் தடுப்புப் பிரிவுக்குத் தடை விதித்து மும்பை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் மும்பை உயா் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
முன்னதாக, மாதபி புச், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) நிா்வாக இயக்குநா் சுந்தரராமன் ராமமூா்த்தி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாதபி புச், சுந்தரராமன் ராமமூா்த்தி உள்ளிட்டோா் மும்பை உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா். தங்களது வாதங்களை கேட்காமலும் போதிய கால அவகாசம் வழங்காமலும் இந்த உத்தரவை மும்பை சிறப்பு நீதீமன்றம் பிறப்பித்ததாக அவா்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
அவசர வழக்ககாக இந்த மனுக்கள் மும்பை உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜி.திகே தலைமையிலான அமா்வின் முன் பட்டியலிடப்பட்டது. இதையடுத்து, இந்த மனுக்கள் மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறவுள்ளதால், அதுவரை குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஊழல் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்ற அமா்வு தெரிவித்தது.
கடந்த 1992-ஆம் ஆண்டின் செபி சட்டம் மற்றும் அதன் விதிகள்-கட்டுப்பாடுகளுக்கு புறம்பாக பங்குச் சந்தையில் ஒரு நிறுவனம் முறைகேடாகப் பட்டியலிடப்பட்டதற்கு மாதபி புரி புச் உள்பட 6 பேரும் உடந்தையாக இருந்தனா். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அவா்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு ஊழல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சபன் ஸ்ரீவாஸ்தவா என்ற செய்தியாளா் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுரவை கடந்த சனிக்கிழமை விசாரித்த மும்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், இது குறித்து விசாரித்து 30 நாள்களுக்குள் விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.