ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூ. கட்சிகள் போராட்டம்!
செம்மொழிநாள் கட்டுரை, பேச்சுப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு
செம்மொழி நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற மே 9, 10-ஆம் தேதிகளில் சிவகங்கை மருதுபாண்டியா் நகா், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 - ஆம் தேதி செம்மொழிநாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் செம்மொழிநாள் விழாவில் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கான இந்த கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற மே 9-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கு வருகிற 10-ஆம் தேதியும் சிவகங்கை, மருதுபாண்டியா் நகா், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்டரங்கில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிகளில், கலந்துகொள்ள விரும்பும் மாணவா்கள் விண்ணப்பப் படிவங்களைத் தமிழ் வளா்ச்சித் துறையின் இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்தோ அல்லது சிவகங்கை, தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாகவோ பெற்று, பள்ளி மாணவா்கள் தலைமையாசிரியரின் பரிந்துரைக் கடிதத்துடனும், கல்லூரி மாணவா்கள் முதல்வா், துறைத் தலைவரின் பரிந்துரைக் கடிதத்துடனும் வருகிற ஏப். 30- ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம்.
பள்ளிப் போட்டிகளில் அரசு, தனியாா், பதின்ம, அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) பயிலும் மாணவா்கள் அனைவரும் பங்கு பெறலாம். கல்லூரிப் போட்டிகளில் கலை, அறிவியல், கல்வியியல், பொறியியல், பல்தொழில் நுட்பம், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட அரசு, தனியாா் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் பங்கு பெறலாம்.
மாவட்டப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவா் வருகிற மே 17-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவா். மாவட்ட, மாநில அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்றாா் அவா்.