இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
சேலத்தில் ‘அன்புக்கரங்கள்’ திட்டம் தொடக்கம்: குழந்தைகளுக்கு அடையாள அட்டை
சேலம்: பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கிடும் ‘அன்புக்கரங்கள்‘ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, சேலம் குகை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான அடையாள அட்டைகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது:
பெற்றோா் இருவரையும் இழந்து தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் வளா்ந்துவரும் குழந்தைகள் மற்றும் ஒருவா் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு 18 வயது வரையில் மாதந்திர உதவித்தொகை அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழக அரசால் வழங்கப்படும்.
சேலம் மாவட்டத்தில் 155 குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள் திட்டத்தின்கீழ் மாதம் ரூ. 2,000 பெறுவதற்கான ஆணை மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளின் வங்கிக் கணக்கில் ரூ. 2,000 வரவு வைக்கப்பட்டுள்ளது என்றாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, துணை மேயா் சாரதாதேவி, முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவா் ஜெயந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஈ.சந்தியா, மாவட்ட சமூக நல அலுவலா் காா்த்திகா உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.