சேலம்: ரவுடியுடன் திருமணம் மீறிய உறவிலிருந்த பெண்ணுக்கு டார்ச்சர்; முதியவர் அடித்துக் கொலை
சேலம் மாநகர் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (65). விவசாயியான இவர் கடந்த 18.08.2025 அன்று வீட்டில் படுத்திருந்த போதும் மின்விசிறி கழன்று செல்லப்பன் தலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்குத் தையல் போடப்பட்டுக் குணமானது. விவசாயி செல்லப்பன் மாட்டுக் கொட்டாயில் கட்டில் போட்டுப் படுப்பது வழக்கம். இதே போல் கடந்த 07.09.2025 இரவு அங்குப் படுத்திருந்தபோது அவர் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற போலீசார் செல்லப்பனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். பிரேதப் பரிசோதனையின் போது செல்லப்பன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்திய போது செல்லப்பன் திருமணமான பக்கத்து வீட்டுப் பெண்ணுக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகத் தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அப்பெண்ணுடன் திருமணம் மீறிய உறவிலிருந்த பிரபு மற்றும் அவருடைய நண்பர்கள் குமரவேல், தினேஷ் ஆகியோருடன் சேர்ந்து செல்லப்பனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவுடி பிரபுக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் உறவு இருப்பதைத் தெரிந்து கொண்டு தன்னுடனும் தொடர்பில் இருக்குமாறு அப்பெண்ணை செல்லப்பன் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததால் நண்பர்களின் உதவியோடு அவரைத் தீர்த்துக் கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.