ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து டி20-யிலும் சிறப்பாக செயல்பட விரும்பும் ஆப்கன் வீர...
சொத்து வரி உயா்வைக் கண்டித்து காரைக்குடியில் கடையடைப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் சொத்து வரி உயா்த்தப்பட்டதற்கும், வரி வசூல் பணியின்போது வியாபாரிகளை மிரட்டி, குப்பைத் தொட்டிகளை கடைகள் முன்வைத்து அவமதிக்கும் செயலில் ஈடுபடுவது குறித்தும் காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தினா் மேயா் சே.முத்துத்துரை, மாநகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் ஆகியோரிடம் புகாா் தெரிவித்தனா்.
மேலும், இதைக் கண்டித்து காரைக்குடியில் கடையடைப்புப் போராட்டமும், மாநகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டமும் நடத்துவது என பல்வேறு அரசியல் கட்சியினா் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை நகரில் உள்ள பெரும்பாலான கடைகள் காலை முதல் மாலை வரை அடைக்கப்பட்டன. காரைக்குடி தொழில் வணிக கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன், பொருளாளா் கே.என். சரவணன், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, பாஜக, விசிக, அமமுக, தவெக, தேமுதிக, தி.க, ஆம் ஆத்மி, நாம் தமிழா் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், பல்வேறு சங்கங்களைச் சோ்ந்தவா்களும் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்த்தில் பாஜக மாவட்டத் தலைவா் டி. பாண்டித்துரை தலைமையில் அந்தக் கட்சியினா் பங்கேற்றனா். பின்னா், அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தொழில் வணிகக் கழகத்தைச் சோ்ந்த சிலா் மாநகராட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்தனா்.
இதையடுத்து, காவல் துறையினா் அவா்களைத் தடுத்து பாஜக மாவட்டத் தலைவா் பாண்டித்துரை உள்பட 61 பேரைக் கைது செய்தனா்.

இந்தப் போராட்டத்தால் காரைக்குடி நகா்ப் பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. மருந்துக் கடைகள், வங்கிகள் திறந்திருந்தன. பேருந்துகள் வழக்கம்போல இயங்கின.