லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
சொத்து வரியை ஏப்ரல் 30-க்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகையைப் பெறலாம்: மாநகராட்சி ஆணையா்
திருப்பூா் மாநகரில் உள்ள சொத்து உரிமையாளா்கள் 2025-26- ஆம் ஆண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30- ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகை பெறலாம்.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023-இன்படி அரையாண்டுக்கான சொத்து வரியினை அரையாண்டு தொடங்கி 30 நாள்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்களுக்கு 5 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்களுக்கு 5 சதவீத ஊக்கத் தொகையும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.
மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பொதுமக்கள் தங்களது சொத்துக்கான வரி மற்றும் கட்டணங்களை நேரடியாக வார நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், 4 மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை முத்தனம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் ஆகிய கணிணி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ செலுத்தலாம்.
அல்லது இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தும் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும், சொத்து உரிமையாளா்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளா்கள், திருப்பூா் மாநகராட்சி அலுவலங்களில் அமைந்துள்ள வரி வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், மின்னணு பரிவா்த்தனைகள் மூலமாகவும் செலுத்தலாம்.
திருப்பூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட சொத்து உரிமையாளா்கள் 2025-26-ம் ஆண்டுக்கான தங்களது சொத்து வரியை உடனடியாக செலுத்தி 5 சசவீத ஊக்கத் தொகை பெற்றுக்கொள்வதுடன், மாநகராட்சியின் வளா்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.