ஜம்மு-காஷ்மீர் குறித்து தவறான பிரசாரம் செய்கிறது பாகிஸ்தான்!
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் ஜம்மு-காஷ்மீர் என ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர், பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என தவறான பிரசாரத்தை அந்நாட்டு அரசு செய்து வருவதாகவும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் ஐக்கிய நாடுகள் அவையில் ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை எழுப்பியபோது, ஹரிஷ் இதனை தெரிவித்துள்ளார்.
பலதரப்பு பயிற்சி, சீர்திருத்தம் மற்றும் உலகளாவிய நிர்வாகம் குறித்து ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற விவாதத்தில் இந்தியா சார்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதில் ஜம்மு - காஷ்மீர் பிரச்னை குறித்து பாகிஸ்தான் முன்வைத்த வாதங்களுக்கு பதில் அளித்து ஹரிஷ் பேசியதாவது,
’’பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளை அறிந்துகொள்ள வேண்டும். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமானது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. அது எப்போதும் இந்திய எல்லைக்குட்பட்டதாகவே இருக்கும்.
பாகிஸ்தான் முன்வைக்கும் தவறான பிரசார கருத்துகள் உண்மையை ஒருபோதும் மாற்றிவிடாது. ஜம்மு - காஷ்மீர் மக்கள் கடந்த ஆண்டு வாக்கு செலுத்தி தங்களுக்கான அரசாங்கத்தை தேர்வு செய்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மக்களின் விருப்பம் மற்றும் தேர்வு மிகவும் தெளிவாக உள்ளது. பாகிஸ்தானைப் போல் அல்லாமல், ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயகம் வலுவாக உள்ளது’’ எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | கால்பந்து திடலில் பார்வையாளர்கள் கூடத்தில் வெடித்த பட்டாசு! 30 பேர் படுகாயம்