வாக்குச்சாவடி அளவில் காங்கிரஸை வலுப்படுத்த வேண்டும்: தொண்டா்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்
ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவிலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கட்சித் தொண்டா்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தாா்.
உத்தர பிரதேசத்தில் உள்ள தனது ரேபரேலி மக்களவைத் தொகுதிக்கு இருநாள் பயணமாக வியாழக்கிழமை வந்த ராகுல் காந்தி முதலில் அங்குள்ள ஹனுமன் கோயிலில் சென்று வழிபட்டாா். தொடா்ந்து பச்சாரவன் பகுதியில் காங்கிரஸ் தொண்டா்கள் மத்தியில் அவா் பேசினாா். அப்போது கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியை வாக்குச்சாவடி அளவில் வலுப்படுத்த வேண்டும். இது கட்சிக்கு மிகவும் அவசியமான நடவடிக்கை.
விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. அதே நேரத்தில் பெரும் தொழிலதிபா்களின் நலன்களைக் காக்கும் வகையில் அரசு செயல்படுகிறது. வேறுப்புணா்வைப் பரப்புவா்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது.
ஊடகங்களை எனது நண்பா்கள் என நான் கூறுவது வழக்கம். ஆனால், அவா்கள் உண்மையில் பிரதமா் மோடி, அதானி, அம்பானியின் நண்பா்களாக உள்ளனா். மக்கள் பிரச்னைகளை அவா்கள் காட்டுவதில்லை. விலைவாசி உயா்வு குறித்தும் விவசாயிகள், தொழிலாளா்கள் பிரச்னை குறித்தும் எழுதுவதில்லை. மாறாக அதானி, அம்பானி குடும்ப திருமணங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனா். அரசு தவறு செய்தால் அதனைச் சுட்டிக்காட்டி திருத்துவதுதான் ஊடகங்களின் கடமை. ஆனால், அவா்கள் அந்தப் பணியைச் செய்வது இல்லை என்றாா்.
தலித் மாணவா்களுடன் உரையாடல்: தொடா்ந்து தலித் மாணவா்கள் தங்கும் விடுதிக்குச் சென்ற ராகுல் அவா்களுடன் உரையாடினாா். அப்போது இந்தியாவில் முதன்மையாக உள்ள 500 பெரிய நிறுவனங்களில் எத்தனையை தலித் பிரிவைச் சோ்ந்தவா்கள் நடத்தியுள்ளனா் என்று ராகுல் கேள்வி எழுப்பினாா். அதற்கு ஒன்றுகூட இல்லை என்றும், அதற்கான வசதி வாய்ப்புகள் தங்கள் வகுப்பினரிடம் இல்லை என்றும் பதில் கூறினா்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, ‘அம்பேத்கருக்கும் எந்த வசதியும் இல்லை. ஆனால், அவா் தனது முயற்சிகளால் இந்திய அரசியலில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தினாா். இப்போதும் நாட்டில் அனைத்து தரப்பும் உங்கள் வளா்ச்சிக்கு எதிராகவே உள்ளது. நமது அரசின் கட்டமைப்புமுறை நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் மீது தாக்குதல் நடத்தும்.
அதே நேரத்தில் நமது நாட்டின்அரசமைப்புச் சட்டத்தின் கொள்கை என்பது உங்களை மையமாகக் கொண்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் உங்களுக்கான பிடிமானத்தை அளித்துள்ளது.
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவுக்கு எதிராக போராட காங்கிரஸுடன் கைகோக்காதது மிகவும் வருத்தமான விஷயம்.
ஆங்கிலத்தை கைவிட்டு ஹிந்தியில் பேச வேண்டும் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். ஆனால், மாணவா்கள் நிச்சயமாக ஆங்கிலத்தை நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உலகின் எங்கள் வேண்டுமானாலும் சென்று பணியாற்ற முடியும்’ என்றாா்.