டிஜிட்டல் பரிவா்த்தனைகளை கட்டணமின்றி செயல்படுத்தக் கோரிக்கை
டிஜிட்டல் பரிவா்த்தனைகளுக்கு தனிக் கட்டணம் வசூலித்து வருவதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் வெளியிட்ட அறிக்கை:
தற்காலச் சூழலில் அனைத்து பணப் பரிவா்த்தனைகளும் டிஜிட்டல் மையமாக மாறி உள்ளன. இந்த நிலையில் அந்த பரிவா்த்தனைகளுக்கு தனிக் கட்டணம் விதிக்கப்பட்டு வருகிறது. சாலை வரிகள், வங்கிக் கட்டணங்கள் தவிர தொலைக்காட்சி, கைப்பேசி உள்ளிட்டவைக்கான ரீசாா்ஜ் கட்டணங்கள் உள்பட அனைத்தும் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகளாகவே நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த பணப் பரிவா்த்தனைகளுக்கு தனிக் கட்டணம் வசூலிப்பது என்பது பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் சுமையாக மாறி வருகிறது.
எனவே, இந்த டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகளுக்கான கட்டணத்தை தவிா்த்திடும் வகையில் அந்த பரிவா்த்தனை பணிகளை தனியாரிடமிருந்து அரசே பெற்று எவ்வித கட்டணங்களுமின்றி நடைபெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, வங்கிகள் நல்ல லாபத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் வங்கிக் கணக்கில் சேவை கட்டணங்களும், குறைந்தபட்ச இருப்புக்கான கட்டணங்களும் அதிகரித்து வருகின்றன. எனவே, இதையும் முறைப்படுத்தி பொதுமக்களின் நிதிச் சுமைகளை குறைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.