இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி! தேடுதல் பணி தீவிரம்!
டிரம்ப் வரிவிதிப்புக்கு தடை! இந்தியா போரை நிறுத்தியதாக மீண்டும் சர்ச்சைப் பேச்சு!
உலக நாடுகள் மீதான பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்க வணிக நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டது.
அமெரிக்கா மீது பல்வேறு நாடுகளும் அதிகளவிலான வரி விதிப்பதாகக் கூறி, அந்நாடுகளின் மீது பரஸ்பர வரியை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, உலகளவில் பங்குச் சந்தைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதனிடையே, வரிவிதிப்பை ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், இந்த வரிவிதிப்பு குறித்து அமெரிக்க வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரிவிதிப்பு உத்தரவை தடை செய்தது.
நீதிமன்றத் தீர்ப்பில் கூறியதாவது, அமெரிக்க அரசியலமைப்பின்படி, வெளிநாடுகளுடனான வணிக ஒழுங்குகளை, அமெரிக்க பேரவையான காங்கிரஸுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால், அதிகாரத்தின் மூலம் அவசரகாலச் சட்டங்களை டிரம்ப் பயன்படுத்தியுள்ளார். அதாவது, பயங்கரவாதிகள் அல்லது அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படும் நாடுகள் மீது பொருள் முடக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் சட்டமான சர்வதேச அவசர பொருளாதாரச் சட்டத்தை டிரம்ப் பயன்படுத்தியுள்ளார்.
இந்தச் சட்டத்தை முதன்முறையாக வரிவிதிப்புக்கு டிரம்ப் உட்படுத்தியுள்ளார். அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, வரிகளை அதிபர் விதிக்க இயலாது. ஆகையால், டிரம்ப்பின் இந்த செயல் சட்டவிரோதமானது.
தனது அதிகார வரம்புகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்ததுடன், ஆசிய பங்குச் சந்தைகளும் மேல்நோக்கிச் சென்றன.
அதுமட்டுமின்றி, தனது வரிவிதிப்பு உத்தரவால்தான், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவியது என்று டிரம்ப் கூறி வந்தார். ஆனால், டிரம்ப்பின் இந்தக் கருத்துக்கு இந்தியா தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, அதிபர் டிரம்ப் மட்டுமே கூறி வந்தநிலையில், தற்போது அமெரிக்க அரசு தரப்பில் இருந்தும் அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு தரப்பிலான இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மட்டும் அமெரிக்கா, சௌதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளில் 8 முறை கூறியுள்ள நிலையில், தற்போது அந்நாட்டு அரசும் கூறுவது குழப்பத்தில் ஆழ்ப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க:டிரம்ப் அரசின் முக்கிய மசோதாவுக்கு மஸ்க் எதிர்ப்பு!